'இனி நான் வாழ்றதே வேஸ்ட்'.. விரக்தியில் இளைஞர் தற்கொலை
இளைஞர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மார்த்தாண்டம்: இளைஞர் ஒருவர் தூக்கு போட்டுதற்கொலை செய்துகொண்டார். ஆனால் அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நந்தன்கோட்டையை சேர்ந்த அஜய் என்னும் 22 வயது இளைஞர், மீன்மார்க்கெட்டில் லோடு மேனாக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று சாயங்காலம் அவர் வழக்கம்போல் வேலையில் இருந்தார். அப்போது ஒரு செல்போன் அழைப்பு அவருக்கு வந்தது. அதை எடுத்து பேசினார். போனில் யாரோ பேச பேச அஜய்யின் முகமெல்லாம் அதிர்ச்சி, வேதனை, கலக்கம் என எல்லாம் ஒன்றாக கலந்து வந்தன.
பிறகு போனை கட் செய்துவிட்டார். இதையெல்லாம் கூடஇருந்து பார்த்து கொண்டிருந்தவர்களிடம், அழ ஆரம்பித்துள்ளார். அவர்களும் அஜய் எதற்காக அழுகிறார் என்று தெரியாமலும் புரியாமலும் ஆறுதல் சொன்னார்கள்.
பிறகு அஜய், அவர்களிடம் கடைசியாக, 'இனி நான் வாழ்வதில் பயனே இல்லை' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
மனமொடிந்து நேராக வீட்டுக்கு சென்ற அஜய், தன் அறைக்கு சென்று கதவையும் பூட்டிக் கொண்டார். ஆனால் ரொம்ப நேரமாகியும் அஜய் வெளியே வராததை கண்ட குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அஜய் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
அஜய் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை என்பதால், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அஜய்-க்கு போன் செய்தவர் யார்? என்ன பேசினார்? என இதுவரை தெரியவில்லை.