தமிழகத்தில் 30,000 "டுபாக்கூர்" டாக்டர்கள் – விளக்கம் கேட்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்
சென்னை: தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் நடமாடுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இதுகுறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில், 30 ஆயிரம் போலி டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக வெளியான பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் இதை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

அதன்படி அந்த போலி டாக்டர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமை செயலாளர், இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி டி.முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நாமக்கல்லில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் பேசுகையில் தமிழ்நாட்டில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் நடமாடி வருவதாகவும், குறிப்பாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் கணிசமான போலி டாக்டர்கள் இருப்பதாகவும் கூறியதாக தேசிய மனித உரிமை ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது.
அந்த தகவல் உண்மையாக இருந்தால், அது தமிழக மக்களின் மனித உரிமையை மீறிய செயல் என்று நீதிபதி டி.முருகேசன் மேலும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications