மநகூ ஒருங்கிணைப்பாளராக நானே தொடருகிறேன்... எந்த குழப்பமும் இல்லையே... வைகோ திட்டவட்டம்
கடந்த காலங்களில் மக்கள்நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளேன். இனிவரும் காலங்களிலும் சிறப்பாக செயலாற்றுவேன் என வைகோ கூறியுள்ளார்.
சென்னை: மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே எந்த குழப்பமும் இல்லை என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின. இதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருந்து வருகிறார். இதனிடையே 3 தொகுதி இடைத்தேர்தலை மநகூ புறக்கணிப்பதாக வைகோ அறிவித்தார். இது வைகோவின் தனிச்சையான முடிவு என செய்திகள் வெளியாகின. இதனால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே சலசலப்பு எழுந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தான் இடைத்தேர்தலை புறக்கணிப்பு முடிவை எடுத்தாக வைகோ தெரிவித்திருந்தார்.

இதனிடையே மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து வைகோ விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ஒருங்கிணைப்பாளர் தேவை இல்லை என இடதுசாரிகள் முன்வைத்த கருத்தை மதிமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் ஏற்றுக் கொண்டதாக அச்செய்திகள் தெரிவித்தன.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் வைகோ கூறியுள்ளதாவது: தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இடையே எந்தக் குழப்பமும் இல்லை. மக்கள் நலக்கூட்டணியினர் தமிழகம், புதுச்சேரியில் தனித்தனியாக செயல்படுகின்றனர்.
புதுச்சேரி நிலைப்பாட்டை தமிழக மக்கள் நலக் கூட்டணியுடன் முடிச்சுப்போட வேண்டாம் எனத் தெரிவித்தார். மேலும், ஒருங்கிணைப்பாளர் விடுவிப்பு பற்றி மநகூ தலைவர்கள் விவாதித்தனர், ஆனால் முடிவு எடுக்கவில்லை. கடந்த காலங்களில் மக்கள்நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளேன். இனிவரும் காலங்களிலும் சிறப்பாக செயலாற்றுவேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார். புதுச்சேரி, நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications