கவலைப்படும் அளவுக்கு கருணாநிதிக்கு எந்த பாதிப்பும் இல்லை.. வைகோ தகவல்!
கவலைப்படும் அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என மதிமுக பொதுச்செயலளார் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: கவலைப்படும் அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என மதிமுக பொதுச்செயலளார் வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மூன்றாவது நாளாக இன்றும் நலிவடைந்துள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டிலேயே அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுநீர் பாதையில் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள காய்ச்சலால் கருணாநிதி உடல் நலிவுற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சென்னை கோபாலபுரத்திற்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடும்பத்தாரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோபாலபுரம் வீட்டிற்கு சென்ற வைகோ கருணாநிதி நலமுடன் இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கவலைபடும் அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார்.
நோய் தொற்று ஏற்படும் என்பதால் மருத்துவர்கள் அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. கருணாநிதி விரைவில் நலம் பெற்று வருவார் என்றும் வைகோ கூறினார். வைகோவின் இந்த தகவல் திமுக தொண்டர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.