கோவில்பட்டி சிறுவன் மர்ம மரணம்! ஆசனவாய் பகுதியில் காயம்? சிசிடிவி காட்சிகள் சொல்வது என்ன?
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவருடைய உடலில் பல்வேறு இடங்களிலும் ஆசனவாய் பகுதியிலும் காயங்கள் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுவன் உயிரிழந்தது எப்படி என்பது தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர், இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்.
மூத்த மகன் 7-ம் வகுப்பும் இரண்டாவது மகன் 5-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இருவருமே அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான்.
அவனுடைய உடல்நிலைக்கு என்ன என தெரியவில்லை. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் பெற்றோர் அந்த சிறுவனுக்கு உணவளித்துவிட்டு இருவரும் கூலி வேலைக்கு சென்று விட்டனர். அப்போது அவர்களது வீட்டிற்கு சிறுவனின் பாட்டி வந்துள்ளார்.
வீட்டில் பேரன் இல்லாததால் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். பிறகு நீண்ட நேரமாகியும் வரவில்லை என்பதால் பதறியுள்ளார்.
அப்போது அந்த சிறுவனின் பெற்றோரும் கூலி தொழிலை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது சிறுவனின் பாட்டி நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து அவர்களும் ஆங்காங்கே தேடியுள்ளனர். சிறுவன் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் போலீஸாருக்கு பெற்றோர் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த சிறுவனை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து பக்கத்துவீட்டார் கொடுத்த தகவலின் பேரில் போலீஸாரும் பெற்றோரும் வந்து பார்த்தனர். உடனே சிறுவனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் இறந்து பல மணி நேரம் ஆனதாக தெரிகிறது.
இந்த நிலையில் சிறுவன் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயின், கையில் அணிந்திருந்த 1 கிராம் மோதிரத்தை காணவில்லை. இதையடுத்து போலீஸார் 3 தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் அந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட போது அவனது வீட்டிற்கு செல்ல 4 வழிகள் உள்ள நிலையில் சிறுவன் அந்த பகுதியை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை என தெரிகிறது. இதனால் கொலைக்காரன் அந்த தெருவிலேயே இருப்பதாக போலீஸார் நம்பினர். இதனால் சிறுவனை அந்த வீட்டில் மாடி, தண்ணீர் தொட்டி உள்ளிட்ட இடங்களில் நேற்று தேடினர்.
இவ்வாறு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை என்பதால், அதிகாலை 4 மணிக்குத்தான் போலீஸார் அந்த பகுதியை விட்டுச் சென்றனர். எனவே போலீஸார் போனதும் யாராவது பக்கத்து வீட்டில் சிறுவனின் சடலத்தை போட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவனது உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. மேலும் ஆசனவாய் பகுதியிலும் லேசான காயங்கள் உள்ளன. எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே சிறுவன் உயிரிழந்தது எப்படி என்பது தெரியவரும். இந்த நிலையில் போலீஸார் விசாரணையில் அந்த பகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் அங்கு நேற்று வந்திருந்ததாகவும் தெரிகிறது. இது குறித்து தொடர்ந்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications