ஏற்காட்டில் எஸ்டேட் அதிபரை கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை.. முகமூடித் திருடர்கள் அட்டகாசம்
சேலம்: ஏற்காட்டில் நேற்று இரவு எஸ்டேட் அதிபர் ஒருவரையும், அவரது மனைவியையும் கட்டிப்போட்டு நகை, பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்காடு பகோடா பாயிண்ட் அருகில் கிராஞ்ச் எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் மையப்பகுதியில் அதன் உரிமையாளர் அப்துல்காதர், அவரது மனைவி நூர்ஜகான் ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணிக்கு எஸ்டேட் வீட்டிற்குள் 4 முகமூடி ஆசாமிகள் புகுந்தனர்.

அவர்கள் வீட்டில் இருந்த அப்துல்காதர், நூர்ஜகான் ஆகியோரை தாக்கினர். பின்னர் கயிற்றால் இருவரையும் கட்டி போட்டனர். அதன் பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூபாய் 2 லட்சம் பணம், 12 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றனர்.
எஸ்டேட் தோட்ட வீட்டில் அப்துல்காதர், தனது மனைவி நூர்ஜகானுடன் தனியாக இருந்து வந்ததை கொள்ளையர்கள் நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், நேற்று இரவு வீட்டிற்குள் புகுந்து கொள்ளை திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏற்காடு போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications