போராட்டம் நடத்திய பெண்களிடம் பாலியல் அத்துமீறல்.. போலீசார் மீது நடவடிக்கை எடுக்க திருமா கோரிக்கை
மோடியின் பணமதிப்பு ரத்து நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களுக்க
சென்னை: மோடியின் பணமதிப்பு ரத்து நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடியின் பணமதிப்பு ரத்து நடவடிக்கையை கண்டித்து கடந்த 31ஆம் தேதி சென்னை மேடவாக்கம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதில் பலரின் மண்டை உடைந்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் காவல்துறையினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. பெண்கள் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நரேந்திரமோடி அரசின் செல்லா நோட்டு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 31ஆம் தேதி சென்னை மேடவாக்கம் - மாம்பாக்கம் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது பள்ளிக்கரணை காவல்நிலைய உதவி ஆய்வாளரும் காவல்துறையினரும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறிள்ளார்.பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்தியோடு தடியடி நடத்திக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தீக்கதிர் நாளேட்டின் நிருபர் போலீசாரால் தாக்கப்பட்டு, அவரது கேமரா பறிக்கப்பட்டுள்ளதையும் திருமாவளவன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மண்டை உடைப்பு - கண்டனம்
போலீசாரின் இந்த அத்துமீறல்களை தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.செல்வா, எஸ்.குமார் உட்பட பல முன்னணித் தோழர்களும் காவலர்களால் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்துள்ளதையும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வாவின் மண்டை உடைக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். தமிழக காவல்துறையின் இந்த வன்முறைத் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மோடிதான் பதில் சொல்ல வேண்டும்
மோடி அரசால் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் கோடி மதிப்பிலான ரூபாயும் இப்போது ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்ட நிலையில் பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் தம்பட்டம் அடித்த ஐந்து லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணம் எங்கே போனது எனத் தெரியவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தான் நாட்டு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துமீறிய போலீசார்
மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கையால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். அதனை எதிர்த்து ஜனநாயக வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் அத்துமீறி கொடும் தாக்குதலில் ஈடுபட்டதையும் பெண்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததையும் எவராலும் ஏற்க முடியாது என்றம் அவர் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மேலும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது புனையப்பட்டுள்ள பொய்வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் சட்டவிரோதமாகத் தாக்குதல் நடத்திய போலீசாரை இடைநீக்கம் செய்யவேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி ஆய்வாளர் மீது உரிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறைக்குப் பொறுப்பான தமிழக முதல்வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துவதாகவும் திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications