ஜெ.வை எதிர்த்து கல்வியாளர் வசந்திதேவி; காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து கல்வியாளர் வசந்திதேவி போட்டியிடுகிறார். காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட்டபோதெல்லாம், கூடுதலான வாக்குகளை அளித்தது காட்டுமன்னார்கோயில் மக்களாகும். அப்படிப்பட்ட பெருமைமிகு தொகுதியில் 15 வருடங்களுக்கு பிறகு நான் போட்டியிடுகிறேன்.
ஆர்.கே.நகர் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட போவதாக ஊடகங்கள் யூகங்கள் வெளியிட்டன. 234 தொகுதிகளில் அதுவும் ஒரு தொகுதிதான் என்றாலும், முதல்வர் போட்டியிடும் தொகுதி ஆர்.கே.நகர் என்பதால், எங்கள் கூட்டணியில் எந்த கட்சி அவரை எதிர்த்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
முதல்வரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அந்த தொகுதியை கேட்கவில்லை. முதல்வரை எதிர்த்து போட்டியிடுவது எங்கள் நோக்கம் இல்லை. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்துதான் எங்கள் நோக்கம்.
ஆர்.கே.நகர் தொகுதியில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கல்வியாளர் வசந்திதேவி போட்டியிட உள்ளார்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.