அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. முதல்வருக்கு திருநாவுக்கரசர் கோரிக்கை
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.20 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு வருமான வரித் துறை பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் பூலித்தேவன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருமான வரித்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். அவர் அமைச்சராக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முதற்கட்டப் பணிகளை வருமான வரித் துறை மேற்கொண்டுள்ளது.

அதனால் அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அது அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும். குட்கா விவகாரத்தில் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பதை கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் யார் யார் போட்டியிடுவது என்பதை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்வார். மாநில தலைவர் அல்லது வேறு யாரோ வேட்பாளர்கள் குறித்த விபரங்களை வெளியிட முடியாது. கூட்டணி கட்சியான திமுக வுடன் தொகுதி பங்கீடு குறித்து முறையான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். தமிழக காங்கிரஸில் ஒரே ஒரு கோஷ்டி தான் இருக்கிறது. அது ராகுல் கோஷ்டி. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் காங்கிரஸில் இணைய விருப்பத்துடன் உள்ளாரா என்பது குறித்து தெரியவில்லை. அவர் தற்போது தனிக்கட்சி ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார் அவரின் விருப்பம் அறிந்து தான் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications