அழுது நாடகமாடும் மோடி... மக்கள் அவதி... திருநாவுக்கரசர், குஷ்பு குற்றச்சாட்டு
மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க அழுது நாடகம் ஆடுகிறார் பிரதமர் மோடி என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ரூபாய் நோட்டு மாற்றம் அறிவிப்பால் மக்கள் பெரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளனர்.
ரூ.2000 ரூபாய் வைத்துக்கொண்டு சில்லரை இன்றி மக்கள் பசியும் பட்டினியுமாக அலைகின்றனர். ரூ.2000 வைத்துக்கொண்டு டீ குடிக்கக்கூட வழியில்லாமல் இந்தியா முழுவதும் மக்கள் வேதனையடைந்து வருவதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 127வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்த பின் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இந்தியா சுதந்திர காற்றை சுவாசிக்க போராடியவர் ஜவஹர்லால் நேரு என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ரூ.2000 ரூபாய் வைத்துக்கொண்டு சில்லரை இன்றி மக்கள் பசியும் பட்டினியுமாக அலைகின்றனர். ரூ.2000 வைத்துக்கொண்டு டீ குடிக்கக்கூட வழியில்லாமல் இந்தியா முழுவதும் மக்கள் வேதனையடைந்து வருவதாக ழுற்றம் சாட்டினார்.
தாங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை செலவு செய்ய முடியாமல் வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் மக்கள் வேதனையுடன் நின்று கொண்டிருக்கின்றனர். மக்களின் கோபம் முழுவதும் ஆளும் பாஜக அரசு மீது திரும்பியுள்ளது என்றார்.
மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்கவே மோடி அழுது நாடகமாடுவதாகவும் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினர். திருநாவுக்கரசரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு மாற்றம் அறிவிப்பால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தார்.
50 நாட்கள் இதே நிலை நீடிக்கும் என்று மோடி அறிவித்திருப்பதால் மக்கள் மேலும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர் எனவும் குஷ்பு கூறியுள்ளார்.
மக்கள் கோபமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி உணர்ச்சி வசப்பட்டு அழுது பேசுவதால் மக்களை சமாதானப்படுத்திவிட முடியாது என்றும் குஷ்பு கூறியுள்ளார்.