எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திருநாவுக்கரசர்... தப்பில்லை என்கிறார் குஷ்பு
எம்.ஜி.ஆரின் 29வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்துக்கு சென்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மரியாதை செலுத்தினார்.
சென்னை: காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நேரு, இந்திரா, காமராஜர், ராஜீவ் என்ற பாரம்பரியத்தையும், தி.மு.க. பெரியார், அண்ணா என்ற பாரம்பரியத்தையும், அ.தி.மு.க.வை பொறுத்தவரை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். என்ற பாரம்பரியத்தையும் கடைபிடித்து வருகின்றன.
மாற்றுக் கட்சி தலைவர்களை மதித்தாலும் அந்த கட்சி தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வழக்கம் இல்லை. காமராஜர் எல்லோராலும் மதிக்கப்படும் தலைவராக இருந்தாலும் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சார்பில் மரியாதை செலுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அதே போல் எம் ஜிஆரும் எல்லோராலும் மதிக்கப்பட்டாலும் திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் மரியாதை செலுத்துவதில் முக்கியத்துவம் தருவதில்லை.
தமிழக காங்கிரசில் இதுவரை எந்த தலைவரும் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தியது இல்லை. பெரியார் ஆரம்பத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்ததால் அவருக்கு மட்டும் மரியாதை செலுத்தப்படுகிறது.

திருநாவுக்கரசர் மரியாதை
காங்கிரசின் அந்த கலாச்சாரத்தை தற்போதைய மாநில தலைவர் திருநாவுக்கரசர் மாற்றியிருக்கிறார். இன்று எம்ஜிஆரின் 29வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர் ஒருவர் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு வந்ததை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். திருநாவுக்கரசருக்கு இது புதிதல்ல. ஏற்கனவே அதிமுகவில் இருந்ததால் எம்ஜிஆரை மறக்காமல் மரியாதை செலுத்தி வருகிறார்.

எம்ஜிஆருக்கு மரியாதை
பாஜகவில் இருந்த போதும் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்த தவறவில்லை. கூட்டணியில் கைகோர்த்தாலும் காங்கிரசும், திராவிட கட்சிகளும் வெவ்வேறு பாரம்பரியத்தில் பயணிப்பவை. இந்த மாதிரி நிகழ்வுகளில் இரு கட்சிகளும் தங்கள் பாரம்பரியத்தை மட்டுமே கடைபிடிக்கும். இந்த நிலையில் திருநாவுக்கரசர் இன்று எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சென்றாலும் முக்கிய நிர்வாகிகள் உடன் செல்லாமல் புறக்கணித்து விட்டனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
இதுபற்றி முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கருத்து கூறும்போது, எம்ஜிஆர் பெரிய தலைவர்தான். அவருக்கு மரியாதை செலுத்துவதில் தப்பில்லை. திருநாவுக்கரசர் எம்ஜிஆருடன் பணியாற்றியவர். அந்த பாசத்தில் சென்றிருப்பார். ஆனால் இதனால் காங்கிரசுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்றார்.

குஷ்பு கருத்து
எம்ஜிஆர் பெரிய தலைவர். அவருக்கு மரியாதை செலுத்தியதை தவறாக நினைக்க முடியாது. இதில் கட்சிக்கு லாபம் என்ன? நஷ்டம் என்ன? என்று பார்க்க முடியாது. என்று கூறினார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் குஷ்பு.












Click it and Unblock the Notifications