பைக்குகளில் வைத்து மணல் கடத்த முயற்சி... தடுத்த நெல்லை போலீசார் மீது தாக்குதல்!
நெல்லை அருகே மணலை சாக்குமூட்டைகளை அள்ளிய பைக்கில் கடத்த முயன்றவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி : நாங்குநேரியான் கால்வாயில் இருந்து மணலை அள்ளி பைக்கில் கடத்த முயன்றவர்களை தடுத்து நிறுத்திய போலீசாரை கொள்ளை கும்பல் மண்வெட்டியால் தாக்கியுள்ளது. எனினும் சுதாரித்துக் கொண்ட போலீசார் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து மண்வெட்டியை பறித்து கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் மற்றும் போலீசார் மூங்கிலடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள நாங்குநேரியான் கால்வாயில் 4 பேர் மணலை சாக்கு மூடைகளில் அள்ளி, பைக்குகளில் கடத்த முயற்சி செய்ததை கண்டனர். இதையடுத்து போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்தனர்.
போலீசாரை கண்டதும் அவர்கள் எஸ்.ஐ மற்றும் போலீசாரை மண்வெட்டி கனையால் தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதை கண்டு சுதாரித்து கொண்ட போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து மண்வெட்டியை பறித்து கைது செய்தனர். இதை பார்த்த மேலும் இருவர் போலீசார் பிடிக்க வரும் முன் தப்பி ஓடி விட்டனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மூங்கிலடியை சேர்ந்த செல்வின், அருண் பாண்டியன் என்பதும், தப்பி ஓடியது மூங்கிலடியை சேர்ந்த முருகன், ஜான்ராஜ் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 3 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.