அதிமுகவின் கோட்டை ஆர்.கே.நகரில் வெற்றிக்கொடி நாட்டிய தினகரன்!
அதிமுக யார் பக்கம் என்று ஆண்டவனே ஆர்.கே நகர் தேர்தல் மூலம் தீர்ப்பு எழுதி உள்ளதாக தொண்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
Recommended Video

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில் அங்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருவது அவரது ஆதரவாளர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அவரது தொகுதியான ஆர்.கே நகருக்கு இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்தது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளராக தினகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்து வருகிறது. இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து இருக்கும் நிலையில், டி.டி.வி தினகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
இதனால் அவரது அணி தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். மேலும், அதிமுகவை தோற்றுவித்தவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவுநாளில் இந்த வெற்றி டி.டி.வி தினகரனுக்கு கிடைத்திருப்பது குறித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிமுக தொண்டர்கள் கூறுகையில், இத்தனை நாட்களாக ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் செய்துவந்த மோசமான அரசியலில் இருந்து தமிழக மக்களுக்கு விடிவு கிடைத்து உள்ளது. எம்.ஜி.ஆர் நினைவு நாளில் ஜெயலலிதாவின் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு மக்களின் ஆதரவை பெற்று இருப்பதன் மூலம் தினகரன் தொண்டர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.
எம்.ஜி.ஆர் நினைவுநாளில் அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை ஆண்டவனே சூசகமாக சொல்லிவிட்டார். இது ஒரு தொகுதி அல்ல; அதிமுக ஆரம்பிக்கப்பட்ட 1977ல் முதல் வெற்றியை கொடுத்த ஆர்.கே நகரில் இருந்து தினகரன் தனது வெற்றிக்கணக்கை துவக்கி உள்ளார் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications