எழுந்து உட்காருகிறார் கருணாநிதி.. விரைவில் வீடு திரும்புவார் - திருமாவளவன் பேட்டி
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தொண்டை மற்றும் நுரையிரல் நோய் தொற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் மீண்டும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய் தொற்றால் மூச்சு விட கருணாநிதி சிரமப்படுவதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க விசிக தலைவர் திருமாவளவன் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கருணாநிதியின் உடல்நிலை நேற்றைவிட முன்னேற்றம் அடைந்துள்ளது. எழுந்து உட்காரும் அளவிற்கு அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு இலகுவாக சுவாசிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின்னர் விரைவில் கருணாநிதி வீடு திரும்புவார் என தெரிவித்தார்.
முன்னதாக இன்று மதியம் வருகை தந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அதேபோல் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்ஆர்எம் கண்ணய்யா உள்ளிட்டோர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications