குடிசைகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு ரூ. 1 லட்சம் வழங்கும்.. வெங்கையா அறிவிப்பு
சென்னை: சென்னையில் வெள்ள சேதப் பகுதிகளைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தனது தொகுதி நிதியிலிருந்து ரூ. 50 லட்சத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அளிப்பதாக அறிவித்தார். அதோடு, வெள்ளத்தால் குடிசை வீடு இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதற்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் வீதம் உதவி வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழையால், இந்தாண்டு தமிழகம் மிக அதிகளவில் மழையைப் பெற்றுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளது.
தமிழக வெள்ள சேதத்தை தேசிய பேரிடராக அறிவித்து மத்திய அரசு கூடுதல் நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக மழை வெள்ள சேதத்தை கடுமையான பாதிப்பு என்று மத்திய அரசு அறிவித்தது.

சென்னையில் வெங்கையா
இந்நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வெள்ள சேதாரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக சென்னை வந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர் துயர்களைக் கேட்டறிந்தார்.

முதல்வருடன் சந்திப்பு
அதனைத் தொடர்ந்து பகல் 12 மணியளவில் தலைமைச் செயலகத்துக்கு சென்ற வெங்கையா நாயுடு, அங்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மழை வெள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் போது, தலைமைச் செயலக அதிகாரிகள் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் வெங்கையா நாயுடு. அப்போது அவர் கூறியதாவது:-

நேரில் ஆய்வு...
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, ஈக்காட்டு தாங்கல் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டேன். அங்கு நிவாரண உதவிகளையும் வழங்கினேன்.

அதிக மழை பெய்ததால்
அதன்பிறகு முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தேன். அப்போது அவர் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கி கூறினார். சென்னையில் ஒரே நாளில் அதிக அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட கடும் சேதங்கள் குறித்து விரிவாக கூறினார்.

மீட்புப் பணி...
ஏற்கனவே 18 லட்சம் பேர்களை வெள்ளத்தில் இருந்து மீட்டு 6,785 முகாம்களில் தங்க வைத்து உணவு- உடை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் உதவி...
நான் அவரிடம் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறினேன். மத்திய அரசின் 3 திட்டங்கள் குறித்து முதலமைச்சருடன் விவாதித்தேன்.

வீடுகட்ட உதவி...
குடிசை வீடு இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதற்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் வீதம் உதவி வழங்கும். அவர்களுக்கு நிலம் இருந்தால் வீடு கட்ட ரூ.1.5 லட்சம் ஆக மொத்தம் ரூ.2.5 லட்சம் ஒதுக்கப்படும்.

வங்கிக் கடன்...
இந்த திட்டம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்க வழி செய்யப்படும். ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற் கொள்ளும்.

மெட்ரோ ரயில்...
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். மெட்ரோ ரயில் திட்டம் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை விரிவாக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இந்தப் பணியும் விரைவாக நடைபெறும்.

ஆக்கிரமிப்புகள்...
சென்னை நகரில் ஆறுகள், நீர்நிலைகள் போன்றவைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதால் தான் பெரிய அளவில் வெள்ளச் சேதம் ஏற்படுகிறது. தற்போது போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நேரம் வந்து விட்டது. இந்தியா முழுவதும் பாகுபாடின்றி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

யு.பி.எஸ்.சி. தேர்வு...
யு.பி.எஸ்.சி. தேர்வுகளை ஒத்திவைப்பு குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். கனமழை, வெள்ளம் குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வு செய்யும்.

நிவாரண நிதி...
எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்படும். பொதுவாக ஒரு எம்.பி. அவரது தொகுதிக்கு மட்டும்தான் நிதி ஒதுக்க முடியும். ஆனால் அதிக வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் உள்ள எந்த எம்.பி.யானாலும், எந்த மாநிலத்துக்கும் அளிக்கலாம்.

வெள்ளம் அதிகம் பாதித்த பகுதி...
சென்னை நகரை மறுசீரமைக்க மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கும். தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டு இருந்தார். மத்திய அரசு வெள்ளம் அதிகம் பாதித்த பகுதியாக தமிழகத்தை அறிவித்து உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications