விநாயகர் விசர்ஜனத்திற்கு கட்டுப்பாடு - இந்து முன்னணியினர் வாயில் கருப்பு துணி கட்டி ஊர்வலம்
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீசார் கடும் கட்டுபாடு விதித்ததால் நெல்லையில் இந்து முன்னணியினர் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு ஊர்வலம் வந்தனர்.
நெல்லை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்ததால் இந்து முன்னணியினர் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு ஊர்வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் விகேபுரம் சுற்று வட்டார பகுதியான சிவந்திபுரம், அம்பலவாணபுரம், டாணா,கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த 23 சிலைகள், அம்பை பகுதியில் வைக்கப்பட்டிருந்த 9 சிலைகள், கல்லிடைக்குறிச்சியில் வைக்கப்பட்டிருந்த 8 சிலைகள் உள்பட 41 சிலைகள் மாலை சிவந்திபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலம் மாவட்ட இந்து முன்னனி செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் தொடங்கியது. ஆண்டுதோறும் சிவந்திபுரத்தில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் துவங்கும் போது இந்து முன்னனி நிர்வாகிகள் பீக்கர் கட்டி பேசுவது வழக்கம்.
இந்தாண்டு ஸ்பீக்கர் கட்டுவதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். அது போல் வருகிற 3ஆம் தேதி சிலைகளை விசர்ஜனம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் ஆக 30ம் தேதிக்குள் சிலையை கரைக்க வேண்டுமென கட்டுபாடு விதித்தனர்.
அதே போல் மாலை 6 மணிக்குள் விநாயகர் சிலையை கரைத்து முடிக்க வேண்டும் என கடும் கட்டுபாடு வித்தித்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஊர்வலத்தில் வந்தனர்.
மேலும் நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை என்று பேனரை ஏந்தியும் தொண்டர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த ஊர்வலத்தை முன்னிட்டு அங்கு பலதத் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.