நெல்லையில் இரட்டைக் கொலையால் பதட்டம்: போலீஸ் குவிப்பு
நெல்லை: நெல்லை டவுனில் நேற்று இரவு 2 பேர் வெட்டி கெ்லை செய்யப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை டவுன் பாறையடியை சேர்ந்தவர் சண்முகம். அதே பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இருவரும் கட்டிட தொழிலாளிகள். பாறையடி தெருவில் வசித்து வந்த மாரியப்பன் கடந்த சில மாதங்களாக பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் சண்முகம் மற்றும் மாரியப்பன் ஆகியோர் ராஜ்குமார் என்பவரை அழைத்துக் கொண்டு டவுன் பஜாரில் பொருட்கள் வாங்க நேற்று இரவு சென்றுள்ளனர். வெஸ்டர்ன்ஸ் தண்ணீர் பாக்ஸ் வாங்கி விட்டு ஒரே பைக்கில் 3 பேரும் பாறையடி தெருவுக்கு திரும்பியுள்ளனர்.
டவுன் சாலியர் தெருவில் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது பைக்கில் வந்த 3 பேர் அவர்களை வழி மறித்துள்ளனர். அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் 3 பேரையும் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதில் ராஜ்குமார் மட்டும் வெட்டப்பட்ட கையோடு தப்பி ஓடினார்.
மற்ற இருவரும் வெட்டு காயங்களோடு பைக்கில் இருந்து சரிந்து விழுந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்கள் அந்த இடத்திலேயே பலியாகினர். பைக்கில் அரிவாளோடு வந்த 3 பேரும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்ததும் பாறையடி தெரு மக்கள் சாலியர் தெருவில் குவிந்தனர்.
இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறினர். இதனால் அந்த தெருவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டன. கொலையான சண்முகத்திற்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மாரியப்பனுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த கொலையால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications