திருப்பூரில் மேகாலயா போராளிக் குழுவினர் தொழிலாளர் போர்வையில் பதுங்கல்: 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் அருகே பதுங்கியிருந்த மேகாலயா மாநிலப் போராளிக் குழுத் தலைவர் உள்பட 2 பேரை, மேகாலயா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் திருப்பூரில் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சின்னக்கரையில் உள்ள பனியன் நிறுவனத்தில், மேகாலயா தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சாக்கோ தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்தின் பேரில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த, அசாம் மாநிலத் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அசாம் மாநிலம், மெண்டித்தஷ் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடிய போராளிக் குழுத் தலைவர் வில்லியம் ஏ.சங்மா(27) அங்கு பணியாற்றி வருவது கண்டறியப்பட்டது. இவர் அசாம் மாநிலம், கோல்பரா மாவட்டம், பக்ரபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

அதேபோன்று மேகாலயா மாநிலம், தெற்கு கரோஹில்ஸ் சோக்பாட் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள டாகல்கர் கிராமத்தைச் சேர்ந்த அலாஸ் ஆர்.சங்மா(32) என்கிற மற்றொரு போராளிக் குழுவைச் சேர்ந்தவரும் இங்கு பணிபுரிவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து 2 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்து, திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1-ல் ஆஜர்படுத்தி மேகலாயா அழைத்துச் சென்றனர்.

தொழிலாளர்கள் போர்வையில்

வடமாநிலங்களில் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் மாவோயிஸ்டுகளின் பார்வை தென்மாநிலங்கள் மீது திரும்பி உள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லைகள் சந்திக்கும் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புதிய தளம் ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் மாவோயிஸ்டுகள் ஈடுபட்டுள்ளனர்.

சமீப காலமாக இந்த காட்டு பகுதியில் மர்ம மனிதர்கள் நடமாட்டம் அதிகரித்து இருப்பது இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா போலீசார் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஊடுருவி இருக்கும் மாவோயிஸ்டுகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டுக்குள் மாவோயிஸ்டுகள் நேரடியாக ஊடுருவ முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு பிழைப்பு தேடிவரும் வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை மாவோயிஸ்டுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. தொழிலாளர்கள் போர்வையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஊடுருவும் முயற்சிகளில் இறங்கி உள்ளதாக தெரிகிறது.

எனவே நக்சலைட்டுகள் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்த இப்படி பல வடிவங்களில் முயற்சி செய்வதால் உஷாராக இருக்கும்படி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகளை மத்திய உள்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

20 மாவோயிஸ்டுகள் கைது

கடந்த 2007க்கு பின்னர் தமிழகத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கேரளாவை சேர்ந்த ஜிலிங், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டுரங்கரெட்டி, கோபால் ஆகியோர் முக்கியமானவர்கள். பீகாரை சேர்ந்த ரவின் பிரசாத் கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடைக்கானல் அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது ஒரு பெண் மாவோயிஸ்ட் உட்பட மூன்று பேர் தப்பினர்.

மாவோயிஸ்ட் தமிழக அமைப்பின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்ட விவேக், சத்யா மேரி ஆகியோர் கடந்த 2012ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் மேற்கு வங்க மாநிலம் மிதான்பூரில் துணை ராணுவப்படை முகாம் மீது தாக்குதலில் ஈடுபட்டவன் சாம்சரண் டுடு. மாவோயிஸ்ட் தீவிரவாதி. துணை ராணுவப்படை மீது தாக்குதல் நடத்திய பின் கோவை வந்தவன் ஒரு வார்ப்பட தொழிற்சாலையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தான். ஓராண்டு தேடுதலுக்கு பின் அவனை இங்கு வந்து மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+