திருவண்ணாமலை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்புப் பணிகள் தீவிரம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று 160 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தவறி விழுந்த குழந்தையின் பெயர் சுஜித். துரை - ஜெயலட்சுமி என்ற தம்பதியரின் மகன் ஆவான்.
திருவண்ணாமலை அருகே கலசம்பாக்கத்தையடுத்து உள்ள கிடாம்பாளையம் என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
160 அடி ஆழ கிணறு
குழந்தை சுஜித் விழுந்துள்ள ஆள்துளை கிணறு அமைந்துள்ள இடம் ஜெயபால் என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த ஆழ்துளை கிணறு 160 அடி ஆழம் உடையது என்றும், குழந்தை சுமார் 40 அடி ஆழத்தில் சிக்கி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கை தீவிரம்
தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டுள்ள நிலையில், இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ், காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீட்பு பணிக்காக விரைந்து வந்துள்ளனர்.
பள்ளம் தோண்டி மீட்க முயற்சி
குழந்தை விழுந்துள்ள இடத்தின் அருகே பக்கவாட்டில் பள்ளம் தோண்டுவதற்காக ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு பள்ளம் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை மயக்கமடைந்துவிடாமல் இருப்பதற்காக குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
ரோபோடிக் குழு விரைவு
இதனிடையே இதுபோன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்பதில் நிபுணத்துவம் பெற்ற மதுரையை சேர்ந்த ரோபோட்டிக் எந்திரம் வைத்துள்ள மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்துகொண்டிருப்பதாக தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சங்கரன்கோவில் சிறுவன்
நேற்றுதான் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.
விழுப்புரம் சிறுமி
அதற்கு சில தினங்களுக்கு முன்னர், அதாவது ஏப்ரல் 5 ஆம் தேதியன்று விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தாள்.
தொடரும் சம்பவங்கள்
10 தினங்களுக்குள் தமிழகத்தில் 3 இடங்களில் அடுத்தடுத்து ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அலட்சிய நிகழ்வுகள்
அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்த பின்னரும், ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள், அதனை உரிய முறையில் மூடாமல் அலட்சியமாக விட்டுச் செல்வதும், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications