தமாகா எந்த கூட்டணியில் இணையும்? இன்று மாலை 3 மணிக்கு அறிவிப்பு- ஜி.கே.வாசன் தகவல்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எந்த கூட்டணியில் இணையும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியின் கதவுகள் சாத்தப்பட்ட நிலையில் தேமுதிக- ம.ந.கூட்டணி மற்றும் பாஜகவுடன் தமாகா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தமாகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் தேமுதிக- ம.ந.கூட்டணியில் தமாகா இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அக்கூட்டணியில் 30 தொகுதிகள் தமாகாவுக்கு ஒதுக்கப்படும் என்றும் இன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும், வாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார்.
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், த.மா.கா. எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என்றார்.