த.மா.கா. முதல் பொதுக்குழு கூட்டம்: தலைவராக ஜி.கே.வாசன் ஏகமனதாக தேர்வு!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக ஜி.கே.வாசன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சென்னையில் இன்று கூடிய அக்கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜி.கே.வாசனை கூட்டணிக்கு இழுக்க அரசியல் கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி ஜி.கே.வாசன் இந்த பொதுக்குழுவில் ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரசை தொடங்கினார். தொடக்கத்தில் இருந்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வந்தார். தற்போது வரை 47 லட்சம் உறுப்பினர்கள் தமாகாவில் இணைந்துள்ளனர். அதன் அடிப்படையில், உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்ட கட்சியினருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிலையில் தமாகாவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை கூடியுள்ளது. தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக ஜி.கே.வாசன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மற்ற நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

2016 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மேலும், மத்தியில் ஆளும் பாஜ அரசு, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பல்வேறு துறை அமைச்சர்கள் மீது சரமாரியாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில் தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை தமாகா எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஜி.கே.வாசன் கட்சியினருடன் விவாதிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இதனால் தமாகாவின் முதல் பொதுக்குழு கூட்டம் அரசியல் கட்சிகளின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது












Click it and Unblock the Notifications