அரசு பஸ் டிக்கெட்டில் விஜயகாந்த்துக்கு விளம்பரமா? கொதித்த அதிமுக தொண்டர்!
சென்னை: அரசு பஸ் டிக்கெட்டில் விஜயகாந்த்துக்கு இலவசமாக விளம்பரம் கிடைப்பதா என்று கொதித்த அதிமுக தொண்டர், அதை போயஸ்கார்டனுக்கு புகாராக எழுதி போட்டுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
அ.தி.மு.க. தொண்டரான நெற்குன்றத்தை சேர்ந்த கண்ணபிரான், சம்பவத்தன்று, பரங்கிமலை செல்வதற்காக கோயம்பேடு பகுதியிலுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது, ஆவடியில் இருந்து தாம்பரம் செல்லும் மாநகராட்சி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் ஏறி பரங்கிமலைக்கு 13 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார் கண்ணபிரான்.
ஆனால், டிக்கெட்டை பார்த்தவருக்கு அதிர்ச்சி. ஏனெனில், டிக்கெட்டில் "விஜயகாந்த் அலுவலகம் டூ புனித தாமஸ் மலை' என்று அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அவரது மனம் கொதித்தது. அதிமுக ஆட்சி நடைபெறும் தமிழகத்தில், அரசு பஸ் டிக்கெட்டில் விஜயகாந்த் பெயர் இடம்பெறுவது தவறல்லவா என்று அறச்சீற்றம் கொண்டார் அந்த அதிமுக தொண்டர்.
பரங்கிமலையில், பஸ்சை விட்டு இறங்கியதும், பதறியபடி ஓடி பரபரப்பாக, கடிதம் எழுதி போயஸ் கார்டனுக்கு போட்டுவிட்டுதான், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியுள்ளார், கண்ணபிரான். இந்த டிக்கெட்டும், அந்த புகாரும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தளங்களிலும் தாறுமாறாக பரப்பப்பட்டு வருகிறது. அவனவனுக்கு சமூகத்தில், ஆயிரம் பிரச்சினை, அதிமுக தொண்டருக்கு என்ன பிரச்சினை பார்த்தீர்களா?