முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காரிலிருந்து சிவப்பு சுழல் விளக்கு திடீர் அகற்றம்.. ஏன் தெரியுமா?
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காரிலிருந்து சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டி விவரம்: தமிழகத்திலுள் உயர் அதிகாரிகள் கார்களில் பொருத்தப்பட்டுள்ள சுழல் விளக்குகள் அகற்றப்பட உள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலேயே அவர் பயணித்த காலத்திலேயே சிவப்பு சுழல் விளக்குகளை பயன்படுத்துவது கிடையாது. தற்போது பிரதமர் காரில் கூட சுழல் விளக்கு அகற்றப்படுகிறது. இந்த சூழலில் நானும் இன்றையிலிருந்து எனது காரில் சுழல் விளக்கை அகற்றுகிறேன்.
மத்திய அரசு அறிவுரை
மத்திய அரசின் அறிவுரைப்படி, மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் காரிலிருந்து சுழல் விளக்கை அகற்ற வேண்டும். எனவே அதையேற்று நானும் சுழல் விளக்கை அகற்றியுள்ளேன் என்றார்.
நழுவிய முதல்வர்
அதிமுக அணிகள் நடுவேயான இணைப்பு பற்றி நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "இது அரசு சம்மந்தப்பட்ட பிரஸ் மீட். எனவே வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது" என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
குடிநீர் பிரச்சினை
மேலும் அவர் கூறுகையில், குடிநீர் பிரச்சினையை தீர்க்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடக்கின்றன. இப்போது கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு அந்த பணிகளும் நடைபெறுகின்றன.
ஏரிகள், குளங்கள்
ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படுவதற்காக குடிமராமத்து பணிகள் நடக்கிறது. குடி மராமத்து பணிகளுக்காக கூடுதலாக ரூ.90 கோடி ஒதுக்கியுள்ளேன். புரட்சி தலைவி 'அம்மா' ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.