காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும்... மோடி முன்னிலையில் முதல்வர் கோரிக்கை!
காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழா மேடையில் பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை : காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழா மேடையில் பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி முதன்மை உரையாற்றினார்.
அவர் பேசியதாவது : சினிமா மற்றும் அரசியல் துறையில் அரை நூற்றாண்டாக சிறந்து விளங்கியவர் ஜெயலலிதா. தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வைத்தவர் ஜெயலலிதா. இலவச கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் என எண்ணற்ற திட்டங்களை தொடங்கி வைத்தவர்.
மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தார். உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு ஜெயலலிதா எடுத்த முயற்சிகளே காரணம். பட்டதாரிப் பெண்களுக்குத் திருமண திட்டம் என பெண்களுக்கென சிறப்பான திட்டங்களை அறிவித்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா போலவே இந்தியாவின் வளர்ச்சியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுபவர் பிரதமர் நரேந்திர மோடி. தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துவதோடு மாநிலங்களின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டுபவர் பிரதமர் மோடி. பிரதமர் தொடங்கி வைக்கும் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது, இதற்காக பிரதமருக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த வாரத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் மொழி, அதனை கற்காதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்ததற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில் பிரதமருக்கு ஒரு கோரிக்கையை வைக்கிறேன், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை, காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இவற்றை செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.