அய்யயோ.. திமுக கழுத்தை பிடித்து வெளியே தள்ளுதோ? பதறும் தமிழக காங்கிரஸ்
திமுகவின் 3-வது அணி முயற்சியால் பதறுகிறது தமிழக காங்கிரஸ்.
Recommended Video
சென்னை: காங்கிரஸ், பாஜக அல்லாத 3-வது அணியை தேசிய அளவில் உருவாக்கும் முயற்சிகளுக்கு திமுக ஆதரவு தெரிவித்து வருவது தமிழக காங்கிரஸ் கட்சியினரை ரொம்பவே பதற வைத்துள்ளது.
3-வது அணி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மமதா, சந்திரசேகராவ் ஆகியோருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கை கோர்த்திருக்கிறார். இது தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல திமுகவுடன் கை கோர்த்துள்ள விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகளுக்கும் அதிர்ச்சிதான்.
இதனால் இப்போதே தற்காப்பு முயற்சிகளில் இந்த கட்சிகள் இறங்கிவிட்டன. இதன் ஒருபகுதியாகத்தான் டெல்லியில் திருநாவுக்கரசர் முகாமிட்டதும், யெச்சூரி-ராகுலை திருமாவளவன் சந்தித்ததும் கூட.
அதேநேரத்தில் தமிழக காங்கிரஸில் ஒருவித பதற்றம் இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. திமுக கழற்றிவிட்டால் நம் கதி அதோகதிதான் என்கிற பதற்றம்தான் காங்கிரஸிடம் இருக்கிறது.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்ற காங்கிரஸின் கோபண்ணா, திமுக தலைமையில் 9 கட்சிகள் கூட்டணி வலிமையாக இருக்கிறது. இதை ஊடகங்கள் உடைக்கப் பார்க்கின்றன என புலம்பினார்.
அதேபோல் மற்றொரு விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, காங்கிரஸ் தலைமையில்தான் தேசிய அளவில் மதச்சார்பற்ற அணி அமைய வேண்டும். அப்படி அமையாமல் போனால் அது பாஜகவுக்கு உதவுவதாக இருக்கும். மமதாவும் சந்திரசேகர ராவும் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் நெருக்கடி கொடுக்கின்றனர். திமுகவை மதில் மேல் பூனையாக வைத்திருக்க முயற்சிக்கின்றனர் என குமுறினார்.