ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தலில் தனித்து போட்டி: ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் 'தைரியம்'!
மதுரை: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ''ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளை மதித்து தாமதமின்றி மத்திய, மாநில அரசுகள் சட்ட நடவடிக்கை எடுத்து வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடைபெற வழி செய்ய வேண்டும் என்றார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது தடை விதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் வற்புறுத்தலால் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இதுபோன்ற விளையாட்டுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஆட்சியில் அமர்ந்து 6 மாதங்களுக்கு மேலாகியும், தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்ற மோடி தலைமையிலான பா.ஜ.க. நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலின் பேரில் சிறுபான்மையினருக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பிரித்தாழும் சூழ்ச்சியை கடைபிடிக்கின்றனர்.
ராஜபக்சே போல சர்வாதிகாரியாக வலம் வரலாம் என மோடி நினைக்கிறார். அப்படி நினைத்தால், ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட முடிவு தான் அவருக்கும் ஏற்படும்.
தமிழக அரசின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளன. லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ராஜபாளையத்தில் 15க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் காய்ச்சலால் பலியாகி உள்ளனர். போர்க்கால அடிப்படையில் கொசுக்களையும், அவற்றால் ஏற்படும் நோய்களையும் மாநில அரசு ஒழிக்க வேண்டும்.
ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை மேம்படுத்த ரூ.165 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. அந்த நிதியை பயன்படுத்தி சிமெண்ட் ஆலை உற்பத்தி திறனை 1,500 டன் ஆக உயர்த்த வேண்டும். மாறாக, அந்த ஆலையை தனியாருக்கு விற்க ஏற்பாடு செய்தால் போராட்டம் நடத்துவோம்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். அப்படி போட்டியிட்டால் தனித்து தான் போட்டியிடுவோம்" என்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
திமுக உடன் கூட்டணி என்றால் பரிசீலிப்போம் என்று கூறிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 24 மணிநேரத்திற்குள் இடைத்தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்திருப்பது அரசியல் ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுகவிற்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்தி அனைத்து எதிர்கட்சியினரும் ஒன்றினைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications