பள்ளி கல்வித்துறைக்கு ரூ. 27,205 கோடி, உயர்கல்வித்துறைக்கு ரூ. 4,620 கோடி நிதி ஒதுக்கீடு!
பள்ளி கல்வித்துறைக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ. 27,205.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை : பள்ளி கல்வித்துறைக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ. 27,205.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ. 4,620 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்டியலிட்டார் : பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு நல்கைத் தொகை மாற்றியமைக்கப்படும். ராணி மேரி கல்லூரியில் பாரம்பரியமிக்க கட்டிடங்கள் ரூ. 26 கோடியில் புதுப்பிக்கப்படும்.
3,090 உயர்நிலைப்பள்ளிகள் 2,939 மேல்நிலைப்பள்ளிகள் ரூ. 462.60 கோடியில் கணினிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் உருவாக்கப்படும். 100 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், 200 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - ஓ.பன்னீர்செல்வம்
உயர்கல்வித்துறைக்கு ரூ.4,620.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 200 கோடி செலவில் நபார்டு வங்கி உதவியுடன் பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ. 758 கோடி நிதி ஒதுக்கீடு. பள்ளி கல்வித்துறைக்கு மொத்தமாக இந்த பட்ஜெட்டில் ரூ.27,205.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்தார்.