தமிழக அரசு பஸ் கட்டணத்தை குறைத்ததன் பின்னணி இதுதானாமே!
தமிழக அரசு பஸ் கட்டணத்தை அவசர அவசரமாக குறைத்ததன் பின்னணி தற்போது யூகிக்க முடிகிறது.
சென்னை : தமிழக அரசு உயர்த்திய பஸ் கட்டணத்துக்கு திமுக போராட்டம் நடத்துவதால் மக்கள் மனதில் இடம் பிடிப்பதை தடுப்பதற்காகவே இந்த கட்டணம் குறைக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.
தமிழக அரசு போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 20-ஆம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டது.
இதை திரும்ப பெறக் கோரி மக்களும் அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். எனினும் இதை திரும்ப பெற மாட்டோம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது.
உங்களுக்கானது...
பேருந்துகள் மக்களுக்கானவை. அவரை நஷ்டத்தில் ஈடுபடும் போது அவற்றை மக்கள்தான் சரி செய்ய வேண்டும் என்று கட்டண உயர்வை பூசி மெழுகினார் முதல்வர் எடப்பாடியார். மேலும் தமிழகத்தை காட்டிலும் மற்ற மாநிலங்களில் பேருந்து கட்டணம் அதிகம் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட அனைத்து அமைச்சர்களும் வக்காலத்துக்கு வாங்கினர்.
நாளை மறியல்
இந்த நிலையில் அதிமுக பாஜகவுடன் இணக்கமாக இருப்பதாக மக்கள் கருதுவதால் அவர்களது கவனம் திமுக பக்கம் திரும்பிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. மக்களின் தலையில் சுமத்திய சுமையை உடனடியாக திரும்ப பெற கோரி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் இன்றுக்குள் பேருந்து கட்டணம் திரும்ப பெறாவிட்டால் மீண்டும் மறியல் நடத்தவும் திமுக திட்டமிட்டிருந்தது.
குறைந்த கட்டணம்
இந்நிலையில் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை அனைத்து நிலைகளிலும் ரூ.1 குறைத்துள்ளது. இது வெறும் கண்துடைப்பு என்று திமுக தெரிவித்துள்ளது. மேலும் இத்தனை நாட்கள் குறைக்கவே முடியாது என்று கூறிய தமிழக அரசு திடீரென மனமாற்றம் அடைந்ததற்கான காரணம் என்ன என்று தற்போது அரசியல் பார்வையாளர்கள் யூகிக்க தெரிகிறது.
மக்கள் மனதில்
ஜெயலலிதாவுக்கு பிறகு, அதிமுகவில் நடைபெற்ற பதவி, அதிகாரத்துக்கான போட்டி, ஜெயலலிதா மரணம் குறித்த அமைச்சர்களின் மாறுபட்ட கருத்து, ஜெயலலிதா அனுமதிக்காத திட்டங்களை தமிழகத்தில் அனுமதித்தது, மத்திய அரசுக்கு அடிபணிவது உள்ளிட்ட காரணங்களால் அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி நிலவது நன்றாகவே தெரிகிறது. இந்நிலையில் ஏதோ கொஞ்சம் நஞ்சம் உள்ள நற்பெயரையும் திமுக போராட்டம் நடத்தி தட்டிச் சென்றுவிடகூடாது என்பதற்காகவே பஸ் கட்டணம் குறைப்பு என்ற பெயரில் லைட்டாக தமிழக அரசு குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.