சிறுவாணியை தூர் வாரும் தமிழக அரசு.. யாரோடு கை கோர்க்கப் போகிறது பாருங்கள்!
கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணையை தூர்வார முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: சிறுவாணி அணையை பெரும் சர்ச்சைக்குரிய ஈஷா யோகா மையத்துடன் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
கோவையில் தொழில்துறையினருடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டி மசோதா தொடர்பாக தொழில்துறையினர் ஜூன் 1-ம் தேதி தமிழக நிதியமைச்சரை சந்திப்பார்கள் என்றார். மேலும் ஜூன் 2ம் தேதி தொழில்துறையினர் இது தொடர்பாக முதல்வரை சந்தித்து தங்களது கருத்துகளை தெரிவிக்க உள்ளதாகக் கூறினார்.
கோவை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் விதமாக சிறுவாணி அணையில் தூர் வாருவது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். "இது கேரள அரசும் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவர்களிடமும் கருத்து கேட்டுள்ளோம், ஈஷா யோகா மையத்துடன் கை கோர்த்து இந்தப் பணியை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது" என்றார்.
சிஸ்டம் கெட்டுப் போச்சு என்று நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தொடர்ந்து கூறி வருவது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் "தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது, சட்டம் ஒழுங்கு நல்ல நிலையில் உள்ளது. மற்ற மாநிலங்களில் தற்போதுள்ள தமிழக சூழல் இருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் ஆனால் தமிழகத்தில் அப்படி எந்த அசம்பாவிதமும் இல்லை. ஏன் சொல்லப்போனார் தமிழகத்தில் உள்ள நடிகர்களுக்கும் நாங்கள் சிறப்பான பாதுகாப்பை அளித்து வருகிறோம்" என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.