தமிழக அரசு திடீர் சுறுசுறுப்பு.. சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு.. மே மாதத்தில் 2 நாட்களுக்கு!
சென்னை: சென்னையில், அடுத்த மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டை முன்னிட்டு, நடைபெறவுள்ள தொழிற் பொருட்காட்சியில் கலந்து கொள்வதற்காக, முன்பதிவு செய்வதற்கு வரும் 25ஆம் தேதி கடைசி நாள் என அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் மே மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில், உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டின்போது, அதே வளாகத்தின் மற்றொரு பகுதியில், அரசு தொழிற் பொருட்காட்சி நடத்தப்பட உள்ளது.
இந்த மாநாட்டில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், கலந்து கொள்ள உள்ளனர். தொழிற் பொருட்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட அரங்குகளில், முதலீட்டாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் இடம்பெற்றிருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு www.tamilnadugim.com என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25 கடைசி தேதி
உணவு பதப்படுத்துதல், விவசாய வர்த்தகம், மோட்டார் வாகனம், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணு வன்பொருட்கள் உள்ளிட்ட 12 முன்னணித் துறைகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன. பொருட்காட்சிக்கான முன்பதிவு செய்வதற்கு இம்மாதம் 25ம் தேதி கடைசி நாளாகும்.
பொருட்காட்சி அரங்கிற்கான இடம், கட்டணம் ஏதுமின்றி ஒதுக்கப்படும். பொருட்காட்சிக்கு விண்ணப்பித்தவர்களை தேர்ந்தெடுத்து இடம் வழங்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, நடத்தப்பட உள்ள பொருட்காட்சி, தொழில் முதலீட்டுக்கு முதுகெலும்பாக திகழும் உபபொருட்கள் மற்றும் இடுபொருட்கள் துறையின் மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கும். தகுந்த நில அமைப்பு, இயற்கை வளம் மற்றும் திறன் கொண்ட பணியாளர்கள் ஆகியவற்றால் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. முதலீட்டாளர்களின் சொர்க்க பூமியாக தமிழகம் நீண்ட காலமாக திகழ்ந்து வருகிறது.

கருத்தரங்குகள்
இந்நிலையில், முதலீடுகளை மேலும் ஈர்ப்பதற்காக தொழில்துறை சார்பில், வெளிநாடுகளில் 2 சுற்றாக கருத்தரங்குகளை நடத்திய போது, அவற்றுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடவும், அவர்கள் தங்கள் தொழிலை தமிழகத்தில் விரிவாக்கம் செய்யவும் ஏதுவாக பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இத்தகைய கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், மும்பை, அஹமதாபாத், புனே மற்றும் கொல்கத்தா ஆகிய பெருநகரங்களிலும், தமிழ்நாட்டின் 5 முக்கிய நகரங்களிலும் இதேபோன்ற கருத்தரங்குகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்
தொழில் முதலீட்டாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வளர்ச்சியில் பங்குபெறுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், 8056202050 - 9952944630 - 9994212176 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அரசின் அறிவிப்பு கூறுகிறது.












Click it and Unblock the Notifications