அடடே எடப்பாடி அரசாங்கம்.. கள்ளுகடைகளைத் தொடர்ந்து இளநீர் பீர் தயாரிக்க அதிரடி திட்டம்!
கள்ளுகடைகளைத் திறப்பதுடன் இளநீர் பீர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டிய நெருக்கடியில் உள்ள தமிழக அரசு கள்ளுக்கடைகளை திறப்பதுடன் இளநீரில் இருந்து பீர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக கோட்டை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த மதுகடைகளை கிராமங்களில் திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வருவாய் பாதிப்பு
சென்னை உயர்நீதிமன்றமும் கிராம சபை கூட்டங்களைக் கூட்டி மதுகடைகள் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடங்களில் புதிய கடைகள் திறக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. இப்படி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு கடும் எதிர்ப்பு நிலவுவதால் தமிழக அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கள்ளுகடைகள்
இதனை சமாளிக்கும் வகையில் கள்ளு கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கள்ளுக் கடைகளைத் திறப்பதன் மூலம் கொங்கு மண்டல தென்னை விவசாயிகளின் ஆதரவை பெற முடியும் என்பது தமிழக அரசின் கணக்கு.
இளநீர் பீர்
அதேநேரத்தில் பனை, ஈச்சமரங்களில் இருந்தும் கள் இறக்கி கள்ளுக் கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசே இளநீரில் இருந்து பீர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாம்.
அரசே அமைக்கிறது?
மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் தமிழக அரசு. தனியாரிடம் இதை கொடுக்கலாமா? அல்லது அரசே இளநீர் பீர் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தலாமா என்பது குறித்து கோட்டையில் மும்முரமாக ஆலோசனைகள் நடைபெறுகிறதாம்.