உயரதிகாரி தொந்தரவு… தீக்குளித்த முத்துக்கிருஷ்ணன் மரணம்: அரசு ஊழியர்கள் போராட்டம்
திருவாரூர்: உயரதிகாரியின் தொந்தரவு தாங்காமல் தீக்குளித்த ஊராட்சி ஒன்றிய ஓவர்சீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு காரணமாக உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூரை அடுத்த அம்மையப்பன் கிராமம் உப்புக்கார தெருவை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன்(38). இவருக்கு மனைவியும், பிரகதீஸ்வரன், யோகேஸ்வரன் என்ற குழந்தைகளும் உள்ளனர். முத்துகிருஷ்ணன் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓவர்சீயராக பணியாற்றி வந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். மாலையில் பெட்ரோல் கேனுடன் அங்குள்ள வயல்வெளிக்கு சென்ற அவர் திடீரென பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவரை திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா மருத்துவமனைக்கு சென்று முத்துகிருஷ்ணனிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார்.
உயரதிகாரி தொந்தரவு
முத்துகிருஷ்ணன் கடந்த 6 மாதம் முன்பு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வரைவாளராக வேலை பார்த்துள்ளார். அப்போது செயற்பொறியாளர் செந்தில்குமார் என்பவர் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக நன்னிலம் ஒன்றிய அலுவலகத்துக்கு பணியிட மாறுதல் பெற்று சென்று உள்ளார்.
மன உளைச்சல்
அங்கு சென்ற பின்னரும் செயற்பொறியாளர் செந்தில்குமார் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாகத்தான் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
வழக்குப் பதிவு
தற்கொலைக்குக் காரணமாக செயற்பொறியாளர் செந்தில் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திருவாரூரில் ஓவர்சீயர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் பேராட்டம்
முத்துகிருஷ்ணன் பணியிட மாறுதல் கேட்டு கிடைக்கவில்லை. அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என்று ஓவர்சீயர்கள் சங்க மாவட்ட தலைவர் வினோத்குமார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர். இதைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்த போவதாகவும் அவர்கள் கூறினர்.
தொடரும் தற்கொலைகள்
தமிழகத்தில் உயரதிகாரிகள் தொந்தரவு தாங்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகி அரசு அலுவலகர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வேளாண்மைத்துறையில் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் ரேசன் கடை ஊழியர் இளங்கோ தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அதிர்வலைகளை உருவாக்கி வரும் நிலையில் நன்னிலத்தில் ஓவர்சீயர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.