அதிமுக தலைமையிலான ஆட்சி முடிந்துபோன ஆட்சியா, செயலிழந்த ஆட்சியா- விஜயகாந்த்
சென்னை: தமிழகத்தில் நிகழ்ந்துள்ள வெள்ள பாதிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ, அமைச்சர்களோ மக்களிடத்தில் பேசமறுத்து, மௌனம் காப்பது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசுக்கு சொந்தமான பல இடங்கள் உபயோகமற்று இருக்கிறது. ஆற்றங்கரையோரம் வசித்த ஏழை மக்களை அந்த இடத்திற்கு மாற்றம் செய்து, அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகளை கட்டிக் கொடுக்கவேண்டும்.
அதிமுக, திமுக ஆட்சியில் சீர்மிகு சென்னையாக்குகிறேன், சிங்கார சென்னையாக்குகிறேன் என்று வார்த்தை ஜாலம் பேசி, உலக நாடுகளிடம் கையேந்தி பெற்ற நிதியெல்லாம் வீணாகிப்போய், இன்று தமிழகம் சுமார் 4 லட்சம் கோடிக்கு மேல் கடனில் சிக்கித்தவிப்பதுதான் மிச்சம்.

சுத்தம் செய்த மழை
இரண்டு ஆட்சியிலும் கூவம் ஆறு, அடையார் ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை முழுமையாக தூர்வாரப்பட்டதாகவோ, சுத்தம் செய்யப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை சென்னைவாழ் மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்திய மழை வெள்ளம் செய்துள்ளது.

நிவாரண பணிகள் சரியில்லை
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. நிவாரண பணிகளில் விநியோகம் செய்யும் முறை சீராக இல்லை. பல இடங்களுக்கு நிவாரண உதவிகள் இன்னும் போய்ச்சேரவில்லை. எனவே உடனடியாக சீர்படுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிர்வாக சீர்கேடு
சென்னைக்கு கப்பலில் வந்துள்ள நிவாரண பொருட்களை எடுத்துச்செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், தமிழகத்திற்கு உதவி செய்ய வந்துள்ள ராணுவத்தினரை ஒருங்கிணைத்திடவோ வழிகாட்டிடவோ ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. இவ்வளவு மோசமான நிர்வாக சீர்கேட்டை தமிழகம் பார்த்ததில்லை.

மவுனம் காப்பது ஏன்?
முதலமைச்சர் - அமைச்சர், மேயர் - கவுன்சிலர் என ஒருவருக்கு ஒருவர் தகவல் தொடர்பில்லாமல் இருப்பதாகவும், அதனால் அதிகாரிகள் செய்வதறியாது திணறுவதன் வெளிப்பாடே இந்த நிலைக்கு காரணமென மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பல்வேறு துன்பங்களை மக்கள் அனுபவித்து வரும் இந்த வேளையில்கூட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ, அமைச்சர்களோ நிவாரண பணிகளில் மெத்தனமாக இருந்துகொண்டு, மக்களிடத்தில் பேசமறுத்து, மவுனம் காப்பது ஏன்?

மேயருக்கு அதிகாரம் இல்லையா?
சென்னை மேயரும் பேசமறுகிறார், மேயருக்கு அதிகாரம் இல்லையா? மேயருக்கு பதிலாக வேறு நபர் அதிகாரத்தில் இருக்கிறாரா? இவர்கள் அனைவருமே மௌனமாக இருந்துவிட்டால், அனைத்து பிரச்னைகளும் முடிந்துவிடும் என்று நினைத்துவிட்டார்களா?

காலாவதியான ஆட்சியா?
அதிமுக ஆட்சி முடிந்துபோன ஆட்சியா? செயலிழந்த ஆட்சியா? காலாவதியான ஆட்சியா? தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இதற்காவது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பதில் சொல்லவேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications