நீட் தேர்வு.. மாநில பாடப்பிரிவு மாணவர்களுக்கு 63 சதவீதம் மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ சேர்க்கையில் 63 சதவீத மருத்துவ இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடக்கும் பட்சத்தில் அதில் மாநில பாடப்பிரிவு மாணவர்களுக்கு 63 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று தரவரிசை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில் நாமக்கல்லை சேர்ந்த மாணவி, கிருத்திகா என்பவர், மாநில பாடத் திட்டத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்றார். ஆனால் நீட் தேர்வில் அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. எனவே தற்போது நடைபெறும் கலந்தாய்வில் தன்னை இணைத்துக் கொள்ள உத்தரவிடக் கோரி ஹைகோர்டடில் வழக்கு தொடர்ந்தார்.
இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்தார். மாநில பாடத் திட்டம் மற்றும் சிபிஎஸ்இ பாடப் பிரிவுகளில் பயின்ற மாணவர்கள் பட்டியலை மதியம் 2.30 மணிக்குள் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு 63 சதவீத இடங்களும், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடப்பிரிவுகளில் படித்த மாணவர்களுக்கு 37 சதவீத இடங்களும் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 83,359 பேர் நீட் தேர்வு எழுதினர். அதில் 32,570 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்துக்கு மொத்தமுள்ள 3534 இடங்களில் மாநில பாடப்பிரிவு மாணவர்களுக்கு 2224 இடங்களும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 1,310 இடங்களும் கிடைக்கும்.
அதாவது மாநில பாடப்பிரிவு மாணவர்களுக்கு 63 சதவீதமும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 37 சதவீத இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட எண்ணிக்கையில் 1,821 பேர் நீட் தேர்வை இரண்டாவது முறையாக எழுதி மருத்துவ படிப்பில் சேரவுள்ளனர். 403 பேர் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் என தகவல் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications