டெங்கு காய்ச்சலில் மக்கள் மடிய... கொடநாட்டில் ஜெ. ஓய்வெடுப்பதா? கேட்கிறார் கருணாநிதி
சென்னை: டெங்கு காய்ச்சலில் மக்கள் மடிந்து கொண்டிருக்க... கொடநாட்டில் முதல்வர் ஓய்வெடுக்க... அமைச்சர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் தலைநகரிலே இல்லாததால், எந்த அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கே வருவதில்லை; அவரவர் துறை நிர்வாகத்தைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அரசு நிர்வாகமே அனாதையாகி விட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் தளத்தில், எழுதியுள்ள கருணாநிதி, "டெங்கு காய்ச்சலுக்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க முன் வராமல் அலட்சியப்படுத்துமானால், தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி அதோகதி தான்! 2016-ம் ஆண்டு வருகின்ற பொதுத் தேர்தல்தான் பின்னடைவுகளுக்கெல்லாம் விடிவு ஏற்படுத்தும்!
சென்னை ராயப்பேட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒன்றரை வயதான பெண் குழந்தை பலியானது. சென்னையில் முடிச்சூரைச் சேர்ந்த 40 வயதான லில்லி, ஆவடியைச் சேர்ந்த 15 வயது மாணவர் ரூபேஷ், ராயப்பேட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை பிரஹதித்தா, வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த ஷிவானி, கேளம்பாக்கத்தைச் சேர்ந்த குழந்தை ஜுலியட், தர்மபுரியைச் சேர்ந்த
எம்.பி.ஏ., மாணவி ஆனந்தி, கரூர் ஒத்தக்கடையைச் சேர்ந்த தர்ஷினி மற்றும் தேசிகா, நெல்லை முக்கூடலைச் சேர்ந்த ரியோ ஜெசி, மற்றும் ஆப்ரகாம் ஆகியோர் பற்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.
ஆனால் துறையின் அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்பு கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசும்போது, 'தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் நோய் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நோய் காரணமாக இறப்பு இல்லாமல் பொதுமக்களைக் காத்து வருகிறோம்' என்று கூறியிருக்கிறார்.
23-10-2015 தேதிய நாளேடு ஒன்று, 'சென்னையில் இந்த ஆண்டு இதுவரை 90 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த ஒரு மாத்தில், ஒரே ஒரு தனியார் மருத்துவமனையில் மட்டும் 200 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றது தற்போது அம்பலமாகி உள்ளது.
சென்னை முழுதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பு சம்பந்தமான தகவல்களை மறைப்பதும் இதன் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது' என்று எழுதியுள்ளது.
அரசு தரப்பில் இருந்து வந்துள்ள அழுத்தம் காரணமாகத்தான் சென்னை மாநகராட்சியினர், டெங்கு காய்ச்சலால் ஒருவர் உண்மையில் இறந்தால் கூட, அதற்கான சான்றிதழைத் தர மறுத்து வருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளைக் கொடுக்காமல், மாநில சுகாதாரத் துறையினர் அக்கறையின்றி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்த டெங்கு காய்ச்சல் வரத் தொடங்கியதுமே எதிர்க் கட்சிகள் சார்பில் பல முறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று கூறப்பட்ட போதிலும், அ.தி.மு.க. ஆட்சியினர் அதிலே அக்கறை காட்டவில்லை. இதையெல்லாம் உடனுக்குடன் கவனித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய முதலமைச்சரோ, கோடைநாடு முகாமிலிருந்து காணொலி காட்சிகள் வாயிலாகவும், அறிக்கைகள் வாயிலாகவும், அரசு நிர்வாகத்தை நடத்திக் கொண்டு, அன்றாடம் இறந்தவர்கள் இத்தனை பேரின் குடும்பத்திற்கு நிதி வழங்கியதாக ஏடுகளுக்குச் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர் தலைநகரிலே இல்லாததால், எந்த அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கே வருவதில்லை; அவரவர் துறை நிர்வாகத்தைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அரசு நிர்வாகமே அனாதையாகி விட்டது. தலைமை எவ்வழியோ, அவ்வழியே தானே அமைச்சர்களும் நடப்பார்கள்! இந்த அழகில்தான் தமிழகத்திலே ஆட்சி தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் கடமை, இப்படிப்பட்ட தகவல்களை அரசுக்குத் தெரிவிப்பது என்ற வகையில்தான் இத்தனை தகவல்களையும் திரட்டி அளித்துள்ளேன். இதற்குப் பிறகும், அரசு நடவடிக்கை எடுக்க முன் வராமல் அலட்சியப்படுத்துமானால், தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி அதோகதிதான்! 2016-ம் ஆண்டு வருகின்ற பொதுத் தேர்தல்தான் பின்னடைவுகளுக்கெல்லாம் விடிவு ஏற்படுத்தும்!" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications