கழிவறையை சுத்தம் செய்து மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த லோகநாதன்! - எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக கழிவறையை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு சுமார் 1500 மாணவர்களை படிக்க வைத்துள்ளார் கோவையைச் சேர்ந்த லோகநாதன்.
சென்னை : நம் கழிவறையை சுத்தம் செய்வதென்றாலே தயங்குபவர்களுக்கு மத்தியில் மற்றவர்களின் கழிவறையை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பல ஏழை மாணவர்களின் கல்விக் கண் திறந்துள்ளார் லோகநாதன்.
கோவை அருகே லேத் பட்டறை வைத்து நடத்தி வரும் லோகநாதன் தன்னுடைய வருமானத்தை குடும்பத்திற்கும் சமூக சேவைக்காக அனைவரும் முகம் சுளிக்கும் கழிவறை சுத்தம் செய்யும் வேலையையும் செய்து வருகிறார். பலரின் கல்விக்கண் திறந்த இவரிடம் நேர்காணல் கண்டது தமிழ் ஒன் இந்தியா, தனது அனுபவங்களை நம்மிடையே அவர் பகிர்ந்து கொண்டார்.
கோவை நஞ்சுண்டாபுரம் என்னுடைய சொந்த ஊர். அப்பா ரயில்வே போலீசாக பணியாற்றி வந்தார். குடும்பத்தில் நான் கடைக்குட்டி பிள்ளை, "எனக்கு 10 வயது இருக்கும் போதே என்னுடைய அப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். என்னுடன் பிறந்த 2 சகோதரர்கள், சகோதரி மூன்று பேரையும் நன்கு படிக்க வைத்து மத்திய அரசுப் பணியில் சேர்த்திருந்தார்" அப்பா.
படிப்புக்கு முழுக்கு
படிப்பில் நாட்டமில்லாததால் 6ம் வகுப்போடு படிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு அம்மாவுடன் இளநீர் வியாபாரத்திற்கு சென்றுவிட்டேன். "அம்மா கலெக்டர் ஆபிசில் இளநீர் விற்று கொண்டிருந்தார், அவருக்கு துணையாக மரம் ஏறி இளநீர் பறிப்பது, இளநீர் வெட்டி விற்பது என்று காலத்தை கழித்தேன்."
18 மொழிகள்
பின்னர் தொழில் கற்றுக் கொள்வதற்காக சுற்றித் திரிந்ததில் 18 மொழிகளை கற்றுக்கொண்டதோடு, வெல்டிங் தொழிலையும் கற்றுக் கொண்டுள்ளார் லோகநாதன். 14 வயதிலேயே கோவையில் நிறுவனம் ஒன்றில் வெல்டிங் பணிபுரிந்து கொண்டே அவ்வபோது சமூக நலப் பணிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
சமூக சேவையில் நாட்டம்
தனக்குள் சேவை செய்யும் மனப்பான்மை இருந்த தருணத்தை நினைவு கூர்ந்து லோகநாதன் சுட்டிக்காட்டிய ஒரு சம்பவம் "எனக்கு 13 வயதிருக்கும் அப்போது இந்திராகாந்தி இறந்துவிட்டதாக அறிவித்தால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுவிட்டன. வடமாநிலத்தவர் ஒருவர் கையில் லக்கேஜூகளுடன், இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தள்ளாத நடை போட்டுக் கொண்டு வந்திருந்தார்.
வடமாநிலத்தவர்களுக்கு உதவி
அப்போது அவர்களை அணுகி உதவி செய்ய முன்வந்தேன். அவர்களுக்கு முதலில் நான் பேசும் மொழி புரியவில்லை என்றாலும் நான் உதவ முன்வந்ததை புரிந்து கொண்டனர். பின்னர் அவர்களின் பெட்டி, படுக்கைகளை தலையில் சுமந்து கொண்டு சர்வ சாதாரணமாக ரயில் தண்டவாளப் பாதையில் நடந்து சென்று அவர்களை ஒரு விடுதியில் சேர்த்தேன், அது ஒரு மறக்க முடியாத நிகழ்வு" என்று நெகிழ்கிறார் லோகநாதன்.
கேலி, கிண்டல்
இதனைத் தொடர்ந்து ஆதரவற்றோர் விடுதிக்கு உடை சேகரித்து கொடுப்பது, செல்வந்தர்களிடம் இருந்து பணம் பெற்றுத் தருவது என்று செய்து வந்துள்ளார் இவர். ஆனால் ஒரு சிலர் லோகநாதன் ஏமாற்றுவதாக கிண்டல் செய்ய அடுத்தவர்களிடம் கையேந்தாமல் தானே பணஉதவி செய்வதற்கான வழியைத் தேடியுள்ளார்.
சேவை செய்வதற்காக தேர்ந்தெடுத்த தொழில்
எங்கள் நிறுவனத்தில் ஒரு நபர் கழிவறையை சுத்தம் செய்து விட்டு செல்வார், அவருக்கு மாதம் ரூ.400 சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்த வேலையை நான் செய்கிறேன் என்று முன் வந்துள்ளார் லோகநாதன். கழிவறை சுத்தம் செய்வது என்றால் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நினைப்பு பலருக்கும் உண்டு, அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை.
தவிர்த்த உறவினர்கள்
இதனால் சக ஊழியர்கள் என்னுடன் சாப்பிடுவது, பேசுவரை கூட தவிர்த்தனர். ஆனால் நான் அவற்றை பொருட்படுத்தவில்லை, தொழிலில் ஈட்டும் வருமானம் குடும்பத்திற்கு, கழிவறை கழுவி ஈட்டும் வருமானம் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு என்று முடிவு செய்தேன்," என்கிறார் இந்த படிக்காத மேதை.
கல்விக்காக கழிவறை சுத்தம்
சுமார் 15 ஆண்டுகள் இது போன்று வீடு வீடாக சென்று கழிவறை சுத்தம் செய்து ஏறத்தாழ ஆயிரத்து 500 குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்துள்ளார் லோகநாதன். "கழிவறை சுத்தம் செய்வதால் நான் ஒதுக்கப்பட்டாலும், என்னால் பலரது அறியாமை இருள் ஒழிகிறது என்பதை நினைக்கும் போது இவையெல்லாம் ஒரு கஷ்டமில்லை" என்று மகிழ்கிறார் உண்மை உழைப்பாளி லோகநாதன்.
அரசியலும் சுத்தம் செய்யப்பட வேண்டும்
தற்போது சுயமாக ஒரு லேத் பட்டறை நடத்தி வரும் லோகநாதன், அதில் ஈட்டும் வருமானத்தில் ஒரு பங்கை ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கி உதவி செய்து வருகிறார். தன்னுடைய மனைவியின் ஒத்தழைப்பும் இருந்ததாலேயே இவற்றை செய்ய முடியும் என்று கூறும் இவரின் மகன் எம்பிஏ பட்டதாரி, மகள் பள்ளி படித்து கொண்டிருக்கிறார். கழிவறையை சுத்தம் செய்வது போல அரசியலும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்கிறார் இந்த அனுபவசாலி.
தேர்தலில் போட்டி
"நம் நாட்டிற்கு நல்ல தலைவர்கள் இல்லாததே அரசியல் சாக்கடையாகிப் போனதற்கு காரணம். எனவே அரசியலிலும் கால் பதிக்க வேண்டும் என்று 2014ம் ஆண்டு கோவை மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு போட்டியிட்டேன். ஆனால் வெறும் ஆயிரத்து 700 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டேன்."
இளைஞர்களுக்கு அட்வைஸ்
எந்தப் பின்னணியும் இல்லாமலே நான் இவ்வளவு முயற்சிப்பது போலவே இன்றைய இளம் தலைமுறையினரும் சமூக சேவை, அரசியல் போன்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழகம் மறந்த கக்கன், காமராஜன், வாழும் அரசியல் தலைவர் நல்லகண்ணு, சங்கரய்யா போன்றோரை முன் உதாரணமாக வைத்து இளைஞர்கள் அரசியல் களம் காண வேண்டும் என்றும் தனது விருப்பத்தை வேண்டுகோளாக வைக்கிறார் லோகநாதன்.