சட்டசபை தேர்தல் செலவுக்காக அதிமுக வேட்பாளர்களுக்கு ரூ.400 கோடி கொடுத்த சேகர் ரெட்டி- அதிர்ச்சி தகவல்
மணல் மஃபியா சேகர் ரெட்டி கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுகவிற்கு ரூ.400 கோடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: போயஸ்கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி கடந்த 2016 சட்டசபை தேர்தலின் போது அதிமுகவின் தேர்தல் செலவிற்கு ரூ.400 கோடி ரூபாய் கொடுத்திருக்கலாம் என்று மத்திய வருவாய்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகளால் இது வெளியாகி தற்போது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளதாக இந்தியா டுடேயில் எழுதப்பட்டுள்ள கட்டுரை தெரிவித்துள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் இந்தியா டுடேவில் அமர்நாத் கே. மேனன் எழுதியுள்ள கட்டுரையை குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சேகர் ரெட்டி டைரி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டியின் வீட்டில் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்கள் பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இப்போதய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரும் இடம் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
போயஸ்கார்டனுக்கு நெருக்கம்
சேகர் ரெட்டி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போயஸ்கார்டன் வீட்டிற்கு நெருக்கமாக இருந்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், ஓ.பன்னீர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலருக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார்.
பீதி கிளப்பும் டைரி
சேகர் ரெட்டியின் டைரியில் எழுதப்பட்டிருப்பதை நினைத்து அதிமுகவின் அமைச்சர்கள், முக்கிய விஐபிக்கள் தூக்கமற்ற இரவுகளை கழித்துக்கொண்டிருப்பதாக அமர்நாத் மேனன் கட்டுரையில் எழுதியுள்ளதாக முரசொலி குறிப்பிட்டுள்ளது.
ரூ.400 கோடி கொடுத்த ரெட்டி
2016ஆம் ஆண்டு பொது தேர்தலின் போது அவர் சுமார் 400 கோடி ரூபாய் வரை ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு கொடுத்திக்கலாம் என்று மத்திய வருவாய்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
தவிப்பில் எடப்பாடிபழனிச்சாமி
உள்கட்சி பிரச்சினையால் இப்போது அதிமுக கட்சி உடைந்துள்ளது. ஆட்சிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது சேகர் ரெட்டி பிரச்சினையும் விசுவரூபம் எடுத்துள்ளது. இன்றைக்கு அதிமுக அமைச்சர்கள் பலரின் தூக்கத்தை பறித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கும் சிக்கலை ஏற்பட்டுள்ளது.
சிக்கிய சேகர் ரெட்டி
ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த சேகர் ரெட்டிக்கு கடந்த நவம்பர் மாதம் முதலே சிக்கல் தொடங்கிவிட்டது. டிசம்பர் மாதம் அவரது வீடு, அவரது கூட்டாளிகள் சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரிடம் இருந்து ரூ. 34 கோடி மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் உட்பட மொத்தம் ரூ. 131 கோடி கைப்பற்றப்பட்டன. பெட்டி பெட்டியாக 77 கிலோ கட்டி தங்கமும் பிடிபட்டது.
87 நாட்கள் சிறை
வரி ஏய்ப்பு குற்றத்திற்காக சேகர் ரெட்டியை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது. 87 நாட்கள் சிறை தண்டனைக்குப் பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவரை மீண்டும் அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த 5ஆம் தேதியன்று சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிக்கு சொந்தமான ரூ. 33.7 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளனர். இது மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
மேலிட செல்வாக்கு
தமிழகம், ஆந்திராவில் சேகர் ரெட்டிக்கு மேலிட தொடர்புகள் அதிகம, அவர் பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு கொடுத்த பணத்திற்கு ஆதாரங்கள் வைத்துள்ளார். அப்படித்தான் அதிமுக அமைச்சர்களுக்கு கொடுத்த பணத்தையும் ஆதாரத்துடன் குறித்து வைத்துள்ளார். இதுதான் இப்போது அமைச்சர்கள் முதல் எடப்பாடி பழனிச்சாமி அரசு வரை பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் எப்படி?
இந்த விவகாரத்தில் முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தப்பவில்லை. சேகர் ரெட்டி கைது செய்யப்பட்ட உடன் அவருடன் திருப்பதியில் ஒபிஎஸ் எடுத்துக்கொண்ட படங்கள் வெளியாகின. உடன் ஒபிஎஸ் தரப்பு, முதல்வரை, தேவசம்போர்டு மெம்பர் வரவேற்றார் என்று கூறியது. ஆனால் அப்படி ஒன்றும் நடைமுறை இல்லை என்றும் இந்தியா டுடே கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.