இல்லாததை இருப்பது போல காட்டுகிறது ஓ.பிஎஸ் அணி...அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளாசல்
மதுரை : ஓ.பன்னீர்செல்வம் அணி இல்லாத ஆதரவை இருப்பது போல காட்டுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் பிளவுபட்ட இரண்டு அணிகளான ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி அணி இணைப்புக்கான பேச்சுவார்த்தை தீயை அணைத்து விட்டு அடுத்ததாக கட்சியின் பலத்தை கூட்ட ஆதரவாளர்களை நேரில் அணுகும் பரீட்சைக்கு தயாராகி வருகிறது.

இரு அணிகளும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னை தீர்ந்து விடும் என்று முதல்வர் பழனிசாமி அணியினர் இன்று வரை கூறி வருகின்றனர். ஆனால் நாங்கள் எங்கள் வழியை பார்த்துக் கொள்கிறோம் என்கிற ரீதியில் மே தின கூட்டத்தின் போது பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினககரனும், பழனிசாமியும் ஒன்றாக இருக்கும் போது இவர்களுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்தி ஒன்று பட்டு செயல்பட முடியும் என்றார்.
இதனால் இருஅணிகள் இணையாது என்றே தொண்டர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் மதுரையில் ஜெ. பேரவைசார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவிடம் எல்லாம் இருக்கும்போது யாரிடமும் பிச்சை கேட்க வேண்டியதில்லை. தன்னிடம் இல்லாததை இருப்பதாக காட்டிக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மிரட்டி வருவதாகவும் அவர் கூறினார்.
நாங்கள் தான் அதிமுக
123 எம்எல்ஏக்கள், 38 எம்.பிக்கள்,மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவருமே தங்கள் அணியில் உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், இப்படை தோற்கின் எப்படைவெல்லும் என்றும் வினவினார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திண்டுக்கலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும் போதும் ஓ.பன்னீர்செல்வம் அணியை வறுத்தெடுத்திருந்தார் அமைச்சர் சீனிவாசன்.
துரோகம்
தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று தொடர்ந்து கூறி வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டது யார் என்றார். எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தால், இறைவன் தண்டனை எப்படி இருக்கும் என்பதை நிச்சயம் பார்க்கலாம் என்றும் அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications