தொகுதிப் பக்கமே வராத எம்.எல்.ஏக்களுக்கு தொகுதிப் படி 25 ஆயிரம் ரூபாயாம் !
சென்னை: கடுமையான நிதிநெருக்கடிக்கு மத்தியில் எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழக எம்எல்ஏ-க்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிவந்தனர். இந்நிலையில் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் கடைசி நாளான நேற்று தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதில், அடிப்படைச் சம்பளம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், ஈட்டுப்படி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தொலைபேசிப்படி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 ஆகவும், தொகுதிப்படி ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், தொகுப்புப்படி ரூ.2 ஆயிரத்து 500ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், வாகனப்படி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும் உயர்ந்தப்பட்டுள்ளது. அஞ்சல்படி ரூ.2 ஆயிரம் என்பதில் மாற்றமில்லை. ஆக மொத்தம் எம்எல்ஏ-க்களின் சம்பளம் ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தவிர சட்டசபை கூடும் நாட்களில் தினப்படியாக ரூ.500, ரயிலில் ஏ.சி. இரண்டடுக்கு பெட்டியில் பயணக் கட்டணம், அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மற்றும் தொலைபேசி, டைப்பிஸ்ட் உள்ளிட்ட சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.
தமிழக முழுவதும் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி, விவசாயிகள் பாதிப்பு, தண்ணீர் பிரச்சினை என தமிழகமே அல்லோகலப்படும் நிலையிலும் கடும் நிதி நெருக்கடியிலும் இந்த ஊதிய உயர்வும், தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.