காங்கிரஸுடன் கூட்டணி வைக்க கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சு: ஜி.கே. வாசன்
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தமிழகத்தில் பல கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை நடத்துவதாக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே நிறுவப்பட்ட மா. சிங்காரவேலரின் முழு உருவ வெண்கல சிலையை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
மத்திய அரசின் முயற்சியால் மீனவர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இனி வரும் காலத்தில் மீனவர்களுக்கு ஏற்படும் தடைகளை எல்லாம் தகர்ப்போம் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தமிழகத்தில் பல கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இறுதி கட்ட பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்த பிறகு கூட்டணி குறித்து கட்சி மேலிடம் அறிவிப்பு வெளியிடும் என்றார்.