லோக்சபா தேர்தல் குறித்து சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு
சென்னை: 16வது லோக்சபா தேர்தல் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக 16வது லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிர செய்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தேர்தலை நேர்மையாகவும், முறையாகவும் நடத்துவதற்காக அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப் பட்ட தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் மற்றும் தேசிய வாத கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் அங்கீகரிக்கப் பட்ட மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் சார்பாக தேர்தல் குறித்த பல்வேறு நடைமுறைகள் பற்றி காணொலிக் காட்சி மூலமாகவும் விளக்கப்படுகிறது. மேலும், அரசியல் கட்சியினர் சார்பாகவும் பல்வேரு கோரிக்கைகள் முன்வைக்கப் பட உள்ளன.
குறிப்பாக அம்மா குடிநீர் பாட்டில்கள் மற்றும் சிற்றுந்துகளில் உள்ளிட்ட அரசு சொத்துக்களில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் மற்றும் இரட்டை இலை போன்ற சின்னத்தை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் வலியுத்தப் படும் எனத் தெரிகிறது.
மேலும், சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியில் பொறிக்கப் பட்டுள்ள் இரட்டை இலை சின்னத்தை மறைப்பது குறித்துப் பேசப்படும் எனக் கருதப்படுகிறது.
காலை சரியாக 11மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.












Click it and Unblock the Notifications