மக்கள் கோபம், 3,000 டாஸ்மாக் கடைகளை மூடுங்க.. அரசுக்கு தமிழக உளவுப் பிரிவு அட்வைஸ்
சென்னை: தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு எதிராக பெருகி வரும் போராட்டங்களைத் தொடர்ந்து அரசுக்கு தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் தற்போது தமிழகத்தில் உள்ள 6000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் பாதியை மூடி விடலாம் என்றும் அதற்குப் பதில் எலைட் கடைகளை அதிகரிக்கலாம் என்றும் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாம்.
மது விலக்கு மற்றும் கலால்துறை பொறுப்பை தன் வசம் வைத்துள்ள தமிழக உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா, தமிழக டிஜிபி அசோக் குமார், உளவுத் துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தியபோது இந்த அறிக்கையை காவல்துறை சமர்ப்பித்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள உளவுப் பிரிவு போலீஸார் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கையை உளவுப் பிரிவு தயாரித்து அரசிடம் வழங்கியுள்ளது.

கோபத்தில் மக்கள்
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாக கூறப்படுபவை... மதுக் கடைகளுக்கு எதிராக மக்கள் கோபத்தில் உள்ளனர். எனவே டாஸ்மாக் கடைகள் மீது அவர்கள் ஆத்திரத்தைக் காட்டுகின்றனர்.

குடிகாரர்களால் பெரும் துயரம்
மதுக் கடைகளுக்கு குடிக்க வருவோரால்தான் பெரும்பாலும் பிரச்சினைகள் வருகின்றன. அவர்கள் நடந்து கொள்ளும் விதம், மக்களுக்குப் பெரும் அவுசரிகயத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் மக்கள் கோபமாக உள்ளனர்.

மதுக் கடைகளை விட குடிகாரர்களால்தான் பிரச்சினை
மக்கள் மதுக் கடைகளுக்கு எதிராக உள்ள கோபத்தை விட மதுவைக் குடித்து விட்டு குடிகாரர்கள் செய்யும் அட்டகாசங்களால்தான் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடைகளுக்கு வெளியே குடிக்கும் குடிகாரர்கள்
பெரும்பாலான பகுதிகளில் கடைகளுக்கு உள்ளேயோ அல்லது பாரிலோ குடிப்பவர்களை விட கடைகளுக்கு வெளியேயும், சாலையோரமாகவும், தெருவிலும் குடிப்போர்தான் மக்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கின்றனர்.

எலைட் கடைகளால் பிரச்சினை இல்லை
அதேசமயம், எலைட் கடைகள் பெரும்பாலும் வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்களில் உள்ளதால் அவற்றால் மக்களுக்குப் பிரச்சினை ஏற்படுவதில்லை.

பாதிக் கடைகளை மூடி விடலாம்
தமிழகத்தில் தற்போது 6250 மதுக் கடைகள் உள்ளன. இதில் 3000 கடைகளை மூடி விடலாம். எலைட் கடைகள் சில டஜன் அளவிலேயே உள்ளன.

எலைட் கடைகளை அதிகரிக்கலாம்
பாதி டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு, எலைட் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். டாஸ்மாக் கடைகளிலும், மது பார்களிலும்தான் மோதல்கள், பிரச்சினைகள் உருவாகும். எலைட் கடைகளில் அதற்கு வாய்ப்பே இல்லை.

முக்கிய இடங்களில் கடைகள் கூடாது
பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு அருகே உள்ள மதுக் கடைகளை முதலில் மூடி விட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாம்.

குடி வருமானம்
தமிழகத்தில் டாஸ்மாக்கின் வருவாய் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே போகிறது. 2003-04ல் வருவாய் ரூ. 3639 கோடி மட்டுமே இருந்தது. ஆனால் இது 2012-13ல் ரூ. 21,680.67 கோடியாக எகிறி விட்டது. 2014ம் ஆண்டு விலை உயர்த்தப்பட்டது. இருப்பினும் விற்பனை குறையவில்லை. மாறாக 2014-15ல் வருவாய் ரூ. 26,188 கோடியாக மேலும் உயர்ந்தது.

10 சதவீத மக்கள் குடிக்கிறார்கள்
தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 லட்சம் பேர் மது அருந்துகிறார்களாம். இது தமிழகத்தின் ஜனத் தொகையில் 10 சதவீதம் என்பது அதிர வைக்கும் செய்தியாகும்.












Click it and Unblock the Notifications