தற்போதைய அரசியல் குழப்பம் திமுகவிற்கே சாதகம் என 61% பேர் கருத்து - தந்தி டிவி கருத்துக்கணிப்பு
தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் திமுகவிற்கே சாதகம் என்று தந்திடிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது. இந்த அரசியல் குழப்பம் யாருக்கு சாதகம் என்று தந்திடிவி கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் 61% பேர் திமுகவிற்கே சாதகம் என்று கூறியுள்ளனர்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக கட்சியில் இருந்தவர்கள் பிரிந்து தனித்தனி அணியாக நிற்கின்றனர். பிப்ரவரி 7ஆம் தேதி வரை பங்காளிகளாக இருந்தவர்கள் தற்போது பகையாளிகளாக மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். கட்சியும் சின்னமும் முடக்கப்பட்டு விட்டது.
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதிமுக ரெண்டு பட்டால் எதிர்கட்சிகளுக்கே அது சாதகம். மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் அது உண்மை என்றே தெரியவந்துள்ளது.

யாருக்கு சாதகம்
தற்போதய அரசியல் குழப்பம் யாருக்கு சாதகம் என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு திமுக என்று 61% பேர் வாக்களித்துள்ளனர். ஒபிஎஸ் அணி என்று 26% பேரும், பாஜக என்று 9%பேரும் மற்றவை என்று 4% பேரும் கருத்து கூறியுள்ளனர்.

அதிமுகவின் எதிர்காலம்
அதிமுகவின் எதிர்காலம் சிதைந்து மற்றொரு அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று 46 % பேர் கருத்து கூறியுள்ளனர்.
இதேபோல தற்போதைய குழப்பத்தை சமாளித்து வலுவாக நிற்கும் என்று 44% பேரும். கருத்து கூற விரும்பவில்லை என்று 10% பேரும் தெரிவித்துள்ளனர்.

கூவத்தூர் கூத்து
அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்கியது பற்றிய கேள்விக்கு இது அதிமுகவின் அச்சம் என்று 81% பேர் கருத்து கூறியுள்ளனர். அதிமுகவின் ஒழுக்கம் என்று 11%பேரும் கருத்து இல்லை என்று 8% பேரும் தெரிவித்துள்ளனர்.

கரும்புள்ளி
அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்கியது ஜனநாயகத்தின் கரும்புள்ளி என்று 83% பேரும், உட்கட்சி விவகாரம் என்று 12% பேரும், கருத்து இல்லை என்று 5% பேரும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications