ரெட்டி- லோதாவுடன் கூட்டணி: எந்த நேரத்திலும் கைது பீதியில் 5 மூத்த அரசியல்வாதிகள், 20 அதிகாரிகள்!!
ஊழல் முறைகேடுகளில் கிடைத்த பணத்தை பங்கு போட்டு வெளிநாடுகளில் முதலீடு செய்த தமிழக அரசியல்வாதிகள், அதிகாரிகள் விரைவில் சிக்க உள்ளனர்.
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி மற்றும் பரஸ்மால் லோதாவுடன் கூட்டணி அமைத்த 5 தமிழக அமைச்சர்கள் மற்றும் 20 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கப் பிரிவு வலைவிரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலின் போது கரூர் அன்புநாதன் வீட்டில் ரூ4.8 கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அப்போது அன்புநாதன் வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றை ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் அன்புநாதன் எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு பினாமியாக செயல்பட்டார்; அவர்களது பணம் சட்டவிரோதமாக எப்படியெல்லாம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை கண்டுபிடித்தனர். பின்னர் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை கையிலெடுத்தனர்.
இந்த நிலையில் சட்டவிரோதமாக பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூ2,000 நோட்டுகளாக மாற்றிய விவகாரத்தில் தமிழக அரசின் முதன்மை கான்டிராக்டரான போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் அன்புநாதன் மற்றும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்குமான தொடர்பு குறித்தும் ஏராளமான தகவல்களை வருமான வரி, அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் திரட்டியுள்ளனர்.

அதிரவைத்த ரெய்டு
அத்துடன் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவ், அவரது மகன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். தலைமை செயலகத்தில் ராமமோகன் ராவ் அறையில் பதுக்கி வைக்கப்பட்ட முக்கியமான 2 செல்போன்களும் சிக்கின.

சிக்கிய லோதா
மேலும் மும்பையில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி ஒருவருக்காக ரூ1,700 கோடி மதிப்பிலான கட்டிடம் வாங்கப்பட்டதும் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பரஸ்மால் லோதாவும் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டுள்ளார்.

எந்த நேரத்திலும் கைது
தற்போதைய நிலையில் தமிழகத்தின் 5 மூத்த அரசியல்வாதிகள், 20 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கப் பிரிவு வலைவிரித்து வைத்திருக்கிறது. ஊழல் முறைகேடுகள் மூலம் கிடைத்த பல்லாயிரம் கோடி ரூபாயை பங்கு போட்டு கபளீகரம் செய்த இந்த அரசியல்வாதிகள் ப்ளஸ் அதிகாரிகள் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் அமலாக்கப் பிரிவிடம் சிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மனோஜ்குமார் கார்க்
ஊழல் முறைகேடு பணத்தை வெளிநாடுகளில் நிலக்கரி வயல்கள், கட்டிடங்கள், தீவுகள் ஆகியவற்றில் இந்த கும்பல் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இப்படி வெளிநாடுகளில் முதலீடு செய்ய உடந்தையாக இருந்த மனோஜ் குமார் கார்க் என்பவரும் ஏற்கனவே சிக்கியுள்ளார்.

பீதியில் அரசியல்வாதிகள்
சேகர் ரெட்டி, பரஸ்மால் லோதா, மனோஜ்குமார் கார்க் ஆகியோரிடம் முழுமையாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் அரசியல்வாதிகள் ப்ளஸ் அதிகாரிகளை குறி வைத்து அடுத்த வேட்டையை தொடங்க இருக்கிறது அமலாக்கப் பிரிவு. எந்த நேரமும் தாங்கள் சிக்க நேரிடும் என்பதால் இந்த கோஷ்டி பெரும் பீதியில் உறைந்து போயுள்ளதாம்.












Click it and Unblock the Notifications