ரூ. 10,200 கோடி தேவை.. வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைத்த ஜெயலலிதா
சென்னை: தமிழக மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ. 10,000 கோடி வரை தேவை என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார். இதில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் மட்டும் அவர் ரூ. 4500 கோடி தேவை என்று கோரிக்கை வைத்துள்ளார்.
நேற்று சென்னையில் தன்னைச் சந்தித்தபோது நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்தார் ஜெயலலிதா. 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்த வெங்கையா நாயுடு, சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளையும் நேரில் பார்வையிட்டார்.
தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா - வெங்கையா நாயுடு சந்திப்பு நடந்தது. அப்போது மாநில அமைச்சர்கள், அதிகாரிகளும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது தமிழக மழை வெள்ள பாதிப்பை விளக்கிய ஜெயலலிதா மத்திய அரசிடம் தமிழக அரசு என்ன எதிர்பார்க்கிறது என்பதையும் விளக்கினார்.

நகரங்களை மறு சீரமைக்க ரூ. 4500 கோடி தேவை
மழை வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்துள்ள தமிழக நகர்ப்புறங்களை மறு சீரமைக்க ரூ 4500 கோடி சிறப்பு நிதியை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை வெளியிட வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

சாலை, குடிநீர், கழிவு நீர் வசதி
நகரங்களில் சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன. குடிநீர் வசதிகளும் சேதமடைந்துள்ளன. கழிவு நீர் மழை நீர்க் கால்வாய்கள் சேதமடைந்துள்ளன. அனைத்தையும் முழுமையாக சரி செய்ய வேண்டியுள்ளது என்றும் வெங்கையாவிடம் ஜெயலலிதா கூறியுள்ளாராம். இதுதொடர்பாக அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

2வது அதிகபட்ச மழை
1918-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின் ஏற்பட்ட மிகுதியான மழைப்பொழிவின் அளவில் இரண்டாவது அதிகபட்ச நிலையில் இடம் பெற்று, கடந்த நவம்பர் மாதம் 101.8 செ.மீ அளவிலான மழைப்பொழிவை சென்னை சந்தித்துள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அமைச்சரிடம் தெரிவித்தார்.

மிகக் கடுமையான மழை
மேலும், டிசம்பர் மாதம், முதல் மூன்று நாட்களிலேயே மிகக்கடுமையான மழை பொழிந்துள்ளது என்றும் கூறினார். இந்த கொடிய சூழலோடு, தெற்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களான பிச்சாத்தூர் அணை மற்றும் கிருஷ்ணாபுரம் அணை ஆகியவற்றில் இருந்து விடுவிக்கப்பட்ட நீரானது, தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளையும், வடிகால்களையும் பெருக்கெடுக்க செய்து, மக்களின் துயரத்தை அதிகமாக்கி உள்ளன என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

நிவாரண உதவிகள்
முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சாலைகள், பாலங்கள், குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கும் அமைப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மிகப்பரந்த அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன என்பதை மத்திய அமைச்சருக்குத் தெளிவாக எடுத்துரைத்தார். முதல்வருடைய ஆணைகளையும், வழிகாட்டுதலையும் ஏற்று செயல்பட்ட அரசு எந்திரமானது எத்தனையோ முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தும், திடீரென ஏற்பட்ட மிகுதியான வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள், மத்திய அரசின் நிதி உதவிகளையும், நிவாரணத்திற்குரிய பொருட்கள் கோரும் உதவியையும் நாட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது.

துயர் துடைப்புப் பணிகள்
வெள்ளத்துயர் துடைப்புப்பணியில் ராணுவம், கப்பற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் நிவாரணப்படை ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்படை மற்றும் பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள் அடங்கிய குழுக்களும் பங்கேற்க வைக்கப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் 18 லட்சத்து 94 ஆயிரத்து 538 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு 6,775 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய மந்திரியிடம், முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

உரிய திட்டங்கள் தேவை
வெள்ள பாதிப்பானது அனைத்து தரப்பு மக்களுக்கும், இடர்களை விளைவித்துள்ளதோடு வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றையும் சேதப்படுத்தியுள்ளதால் துயர் தணிப்புக்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய திட்டங்களும் வகுத்து செயல்படுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு முதல்வர் வலியுறுத்தினார். மத்திய துறைகளோடு நேரடித் தொடர்புடைய, நிவாரணம் பெறும் நிலையிலுள்ள, பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு தேவையான பணிகள் குறித்தும் முதல்வர், அவரிடம் அழுத்தமாக குறிப்பிட்டார்.

படம் பிடித்துக் காட்டினார்
குறிப்பாக, வெள்ளத்தில் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கும் சென்னை நகரின் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரையோரங்களில் வாழ்ந்து வந்த குடிசைவாழ் மக்களின் பரிதாப நிலையை முதல்வர் ஜெயலலிதா மத்திய அமைச்சருக்குப் படம் பிடித்து காட்டினார். அவர்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்கள் அனைவரும் தற்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இச்சூழலில், சென்னையில் நீர் நிலைகளையொட்டி வாழ்ந்து வந்த குடிசைவாழ் மக்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில், வேண்டியனவற்றை மிக விரைவில் செய்து தர வேண்டியதே அரசின் தலையாய முன்னுரிமை என்பதை மத்திய அமைச்சரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தினார்.

50,000 குடும்பங்களுக்கு வீடுகள்
வெள்ளச்சேதம் குறித்த விரிவான கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு முகவாண்மையகங்களின் கூற்றுப்படி, மூன்று பெரும் நீர்நிலைகளையொட்டி வாழ்ந்து வந்தவர்களின் எண்ணிக்கை 50,000 குடும்பங்கள் என்றளவில் கண்டறியப்பட்டு உள்ளது. இக்குடும்பங்களுக்கு வேறு நல்ல இடங்களில் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும். இந்த குடும்பங்களுக்கு மாற்று வீட்டு வசதி செய்து தரும் வகையில் புதிய வீடுகளை கட்டித்தருவதற்கான திட்டமொன்று தயார் நிலையில் இருப்பதாகவும் அதற்கு ரூபாய் 5,000 கோடி நிதி தேவைப்படும் என்றும் மத்திய அமைச்சரிடம் முதல்வர் தெரிவித்தார்.

சிறப்புத் திட்டம்
கடுமையான சேதத்தின் அளவை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெறும் நோக்கில், புதிய வீடு கட்டித்தரும் திட்டத்தை ஒரு சிறப்பு திட்டமாக அமைத்துக்கொண்டு, மகத்தான இந்த வீட்டுவசதி திட்டத்திற்கு சிறப்பு மானிய நிதியுதவி வழங்குமாறு மத்திய அமைச்சரை முதல்வர் கேட்டுக்கொண்டார். அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையைப் பெறுகின்ற திட்டமாக இது அமைந்துள்ளது என்பதை மத்திய அமைச்சரிடம் முதல்வர் மீண்டும் வலியுறுத்தினார்.

ரூ. 750 கோடியில் வீடுகள்
அனைவருக்கும் வீட்டுவசதி என்ற மத்திய அரசு திட்டத்தின் கீழ், கடுமையான மழையினால் பாதிக்கப்பட்டு குடிசைகளை இழந்த சென்னை பெருநகரப்பகுதியில் வாழ்ந்து வந்த 50 ஆயிரம் குடும்பங்களுக்கு அவ்விடங்களிலேயே வீடுகள் கட்டித்தர ரூ.750 கோடி அளவிலான நிதியுதவிக்கான சிறப்பு தொகுப்பு திட்டத்தை அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முதல்வர் மத்திய அமைச்சரிடம் வைத்தார். நிரந்தர வீட்டு வசதியை ஏற்படுத்தும் விதத்தில் அந்தந்த இடங்களிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தர, வீடு ஒன்றிற்கு மத்திய அரசின் நிதி உதவியாக ரூ.1.5 லட்சமும், மாநில அரசின் பங்களிப்பாக வீடு ஒன்றிற்கு ரூ.1 லட்சமும் ஆக மொத்தம் ரூ.2.5 லட்சம் உதவி மானியமாக வழங்கப்படும்.

குடிநீர் கழிவு நீர் வசதிகள்
வெள்ளம் சூழ்ந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள சாலைகள், குடிநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள விரிவான சேதங்களின் விவரங்களை முதல்வர், மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்த அமைப்புகளை மீட்டுறு செய்ய சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கணிசமான நிதியுதவி தேவைப்படும். தொடக்க கட்ட மதிப்பீடுகளின் தேவையானது, ரூ.4,500 கோடியைத் தாண்டும். குடியிருப்பில் உள்ளவர்கள் ஏற்கனவே மிகப்பெரும் அளவில் நிதி இழப்பிற்கு ஆளாகியுள்ள நிலையில், நகர உள்ளாட்சி அமைப்புகள் வரி வருவாய் மூலம் பெறக்கூடிய அவர்களது சொந்த நிதி ஆதாரங்களை மட்டுமே சார்ந்திருக்க இயலாது.

மெட்ரோ
தமிழ்நாட்டில் உள்ள வெள்ள பாதிப்புக்குள்ளான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ரூ.4,500 கோடி அளவிலான ஒரு சிறப்பு உதவித்தொகுப்பினை வழங்கிட மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தினார். வெள்ளப்பெருக்கு காலத்தின் போது பெருவாரியான பயணிகள் மாநில போக்குவரத்து கழக பேருந்துடன், மெட்ரோ ரயில் சேவையையும் பயன்படுத்தியதாக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார். எனவே, சென்னையில், மெட்ரோ ரயில் சேவை அமைப்பினை உள்ளடக்கிய பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தி மேம்படுத்துவது அவசியமாகிறது. மத்திய அரசின் நிலுவையிலுள்ள, வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் வரையிலான ரூ.3,770 கோடி மதிப்பீட்டிலான முதல் கட்ட மெட்ரோ ரெயில் பாதை விரிவாக்கத்திற்கு விரைவான அனுமதி கோரி முதல்வர் வலியுறுத்தினார்.

வருத்தம் தெரிவித்த வெங்கையா
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் அளவு குறித்து மத்திய அமைச்சர் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார். மேலும் அவர், இந்திய அரசின் நடைமுறையில் உள்ள திட்டங்களின் படி, குடிசைப்பகுதிகளில் வீட்டு வசதி மேம்பாட்டிற்கான 3 வகையான உதவித் திட்டங்கள் இருப்பதாக குறிப்பிட்டார். மத்திய அரசின் இத்திட்டத்தின் படி, வழங்கப்படும் உதவிகள் போதுமானதாக இல்லாதபட்சத்திலும், இப்பேரிடரின் தாக்கத்தைப் பொறுத்துப் பார்க்கையில் பாதிக்கப்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் நிதி வழங்க இயலாத இச்சூழ்நிலையில், தமிழகத்திற்கு சிறப்பு பகிர்ந்தளிப்பு உதவியின் மூலம், நீர்நிலைகளையொட்டி தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டிருந்தவர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகள் கட்டித்தர மாநில அரசின் சார்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் வரையிலான முதல் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கத்திற்கு, நகர்ப்புற மேலாண்மை அமைச்சகத்தினால் ஒப்புதல் வழங்கப்பட்டு நிதியமைச்சகத்தின் பொது முதலீட்டுக் குழுவின் அனுமதிக்காக அனுப்பப்பட்டு உள்ளது என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

அம்ருத் திட்டம்
இது குறித்து அவர் நிதியமைச்சகத்தின் விரைவான அனுமதிக்கு தொடர்ந்து முயற்சி செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார். புத்துணர்வு மற்றும் நகர உருமாற்றத்திற்கான அம்ருத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட மாநில நடவடிக்கை திட்டத்தினை தற்பொழுது மாறியுள்ள சூழ்நிலையின் அடிப்படையில், ஒரு சிறப்பு நேர்வாக மாற்றியமைக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications