ஆபாசமாக திட்டி.. தலைமுடியை இழுத்து.. ஹசீனா, ஜான்சி ராணி குடுமிபிடி ..சத்தியமூர்த்தி பவனில் பரபர!
சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளிடைய கடும் சண்டை நடைபெற்றது.
சென்னை: சத்தியமூர்த்தி பவன் என்றாலே கோஷ்டி சண்டை நடைபெறும் இடம் என்றாகிவிட்டது. தமிழக மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சி ராணி மற்றும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் ஹசீனா ஆகியோர் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் ஜான்சிராணி கடுமையாக தாக்கப்பட்டார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள் உள்ளன. இப்போது மகளிர் காங்கிரஸ் அமைப்பிலும் பல கோஷ்டிகள் உருவாகி விட்டன.
ஆண்களுக்கு கடும் போட்டியாக, நக்மா அணி, குஷ்பு அணி, மாநில மகளிர் காங்கிரஸ் அணி என பற்பல மகளிர் அணிகள் உள்ளன. முன்னாள் எம்எல்ஏ யசோதாவும் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கியுள்ளார்.

விஜயதாரணி
தமிழக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக விஜயதாரணி இருந்த வரை கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. அப்போது தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் விஜயதாரணிக்கும் இடையே ஏழாம் பொருத்தம்தான்.

பொன்னம்மாள் பேத்தி ஜான்சி ராணி
இந்த நிலையில்தான் விஜயதாரணியை மகளிர் காங்கிரஸ் அணி தலைவி பதவியில் இருந்து நீக்கி விட்டு முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாளின் பேத்தி ஜான்சி ராணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சில போராட்டங்களை நடத்தியுள்ளார்.

நக்மா ஆதரவாளர் ஹசீனா
ஆனால் மாநில மகளிர் காங்கிரஸ் அணி தலைவி பதவியைக் கைப்பற்ற சிலர் முயற்சி செய்கின்றனர். அதில் நக்மாவின் ஆதரவாளர் ஹசீனாவும் ஒருவர். இன்று சத்திய மூர்த்தி பவனுக்கு வந்த மகளிர் அணி நிர்வாகிகள் சிலர் ஜான்சிராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஹசீனா ஆதரவாளர்கள் அடாவடிப் பேச்சு
இதில் ஹசீனா ஆதரவாளர்களின் பேசிய வார்த்தைகள் ஜான்சிராணிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பதிலுக்கு ஜான்சிராணியும் பேசவே பேச்சுவார்த்தை முற்றி மோதலாக உருவெடுத்தது. இதில் கைகலப்பும் ஏற்பட்டது.
ஜான்சி ராணிக்கு படுகாயம்
இதில் ஜான்சிராணிக்கு கடுமையான அடி விழுந்தது. பெண்களுக்கு இடையேயான மோதலில் ஆண்களும் புகுந்தனர். ஜான்சிராணியை பலரும் தாக்கினர். இதில் ஜான்சிராணி காயமடைந்தார்.

திருநாவுக்கரசர் பேட்டி
சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் திருநாவுக்கரசர், பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications