தங்கம்போல ஏறி வரும் தக்காளி விலை... அதிர்ச்சியில் நெல்லைவாசிகள்
நெல்லையில் தக்காளி விலை சதமடித்துள்ளதால் இதை வாங்கி எப்படி சமைப்பது என்று தெரியாமல் பொது மக்கள் திகைப்படைந்துள்ளனர்.
திருநெல்வேலி: ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்பட்ட தக்காளி இப்போது அவர்களுக்கு எட்டா கனியாக மாறி விட்டது. கிலோ ரூ. 100க்கு விற்பனை செய்யப்படுவதால் தக்காளியை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்
தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வறட்சி நீடித்து வருகிறது. இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதோடு தற்போத தோட்ட பயிர்களையும் பயிர் செய்ய முடியவில்லை. கிணற்று நீரை நம்பி காய்கறி பயிர் செய்த விவசாயிகளுக்கு தற்போது கிணற்று நீரும் கிடைக்கவில்லை.
பொதுவாக வெயில் காலங்களில் விலை மலிவாக கிடைக்கும் தக்காளி இந்த சீசனில் வறட்சி காரணமாக விலை உயர்ந்துள்ளது. கடந்த 16ம் தேதி தக்காளி விலை ரூ.70 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.100 ஆக உயர்ந்து விட்டது. ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்பட்ட தக்காளி இப்போது அவர்களுக்கும் எட்டா கனியாக மாறி விட்டது.
இந்நிலையில் சின்ன வெங்காயத்தின் விலையும் இறங்குவதற்கான அறிகுறியே இல்லை. நெல்லையில் சின்ன வெங்காயத்தின் விலை சில வாரங்களுக்கு முன்பு ரூ.70 ஆக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது அதுவும் சதம் கண்டு விட்டது. இதனால் ஏழை, நடுந்தர மக்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பல்லாரியை குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.