உலாவரும் சிறுத்தை.. மயிலாடுதுறையில் 7 பள்ளிக்கு நாளை விடுமுறை.. 10ம் வகுப்புக்கு தேர்வு உண்டு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் நாளை 7 பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாறாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும். 10ம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் நேற்று இரவில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. சாலையில் சிறுத்தை நடமாடியது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் சிறுத்தை நடமாட்டத்தால் இன்று செம்மங்குளம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுமுறை வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும் தற்போது வரை சிறுத்தை சிக்கவில்லை.

இந்நிலையில் தான் சிறுத்தை தென்பட்டால் 93608 89724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் நாளை (ஏப்ரல் 4- வியாழக்கிழமை) மயிலாடுதுறையில் கூறைநாடு பகுதியில் சிறுத்தை நடமாடும் பகுதிகளில் உள்ள 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
அதன்படி அழகு ஜோதி மழலையர் பள்ளி, ராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, தொல்காப்பியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, விஜய் நர்சரி பிரைமரி பள்ளி, செவன்த் டே அட்வென்டிஸ்ட், அறுபத்து மூவர் நர்சரி பிரைமரி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நாளை 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. திட்டமிடப்படி 10 ம்வகுப்பு மாணவ-மாணவிகள் தங்களுக்கான பள்ளிகளில் சென்று தேர்வு எழுத வேண்டும். இந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்காக காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications