மாணவர்கள், மீனவர்கள் மீது தாக்குதல்.. கண்டித்து குடியரசு தினத்தன்று கறுப்புக் கொடி பேரணி.. மதுரையில்
மதுரை: கடந்த திங்கள் கிழமை தமிழகம் முழுவதும் மாணவர்கள் தாக்கப்பட்டது மற்றும் சென்னையில் மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரையில் போராட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்புகள் இணைந்து மதுரையில் இந்தப் போராட்டத்தை நடத்தியது. மதுரை பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடி ஏந்தி கண்டனப் பேரணியாக புறப்பட்டு ரயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர்.
அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது. போராட்டத்தின் போது, ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை தாக்கிய போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னை நடுகுப்பம் பகுதியில் மீனவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
குடியரசு தினத்தன்று கறுப்புக் கொடி பேரணி நடைபெற்றதால் மதுரையில் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து குடியரசு தினமான இன்று தமிழகம் முழுவதுமே பொதுமக்கள் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் போலீசாரை கண்டித்து ஒதுங்கியே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.