திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு.. விஏஓ சிறைபிடிப்பு
திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்தும் நோட்டீஸ் வழங்கச் சென்ற விஏஓ மக்களால் சிறைபிடிக்கப்பட்டார். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி: திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பான நோட்டீஸ் அளிக்கச் சென்ற விஏஓ அப்பகுதி மக்களால் சிறைபிடிக்கப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இங்குள்ள விமான ஓடுதளம் 8,136 அடியாக உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு நேரடி விமான வசதி இருந்தாலும், சிறிய ரக விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

எனவே, பெரிய ரக விமானங்களும் வந்து செல்லும் வகையில் விமான ஓடுதள பாதையை 12 ஆயிரம் அடிக்கு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான 683 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதில், 337 ஏக்கர் நிலம் ராணுவத்துக்குச் சொந்தமானது. மீதி நிலம் தனியாருக்கு சொந்தமானது. தனியாருக்குச் சொந்தமான இந்த நிலங்களைக் கையகப்படுத்தும் பணியைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்கள் குறித்த நோட்டீசை அளிக்க விஏஓ பத்மநாபன் அப்பகுதிக்குச் சென்றார். அப்போது, அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும், விஏஓ பத்மநாபனை சிறைபிடித்து வைத்துள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications